…நிழல்கள்…

ஜூன் 22, 2010

உலக நாயகன் – 4

Filed under: கதை,மருத்துவம்,Fiction,Medicine,Tamil — Vijay @ 2:55 பிப

முன்கதை: உலக நாயகன் – 12, 3

இத்தனை நேரம் மீனாட்ச்சியின் தாய் சொல்லிக்கொண்டிருப்பதை கதை கேட்பது போல் “உம்” கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்த ரேவதி திடுக்கிட்டு, “என்னது?! ஜன்னி வந்துச்சா?!” என்று கேட்டாள்.

“ஆமாம்மா ரெண்டு நிமிஷம் கை காலெல்லாம் இழுத்துக்கிட்டு, கருவிழி மேலே போய் மயக்கமாயிட்டா. கீழே உங்க டாக்டரும் நர்ஸுகளும் கை நரம்புல ஊசி குத்தி குளுகோஸ் போட்டாங்க. ஒரு நர்ஸ் பார்த்துட்டு கொழந்தை வெளிய வர்றமாதிரி இருக்குன்னு சொல்லிச்சு, அப்புறம் என்னை வெளிய அனுப்பீட்டாங்க.”

“ஒன்னு சொல்ல மறந்த்துட்டேனேம்மா! கார்ல வரும்போதே பனிக்குடம் ஒடஞ்சு போச்சுன்னு எனக்கு சந்தேகம். ஆனா தண்ணி ரொம்பக் கம்மியாத்தான் வந்த மாதிரி இருந்திச்சு.”

“ஓ! அப்படியா,” என்று கேட்ட ரேவதி தொடர்ந்து, “கர்பமா இருக்கும்போது வெறு ஏதாவது பிரச்சினை இருந்ததாம்மா?” என்றாள்.

“அதை ஏம்மா கேக்குற, ஆரம்பத்திலிருந்தே பிரச்சினை தான். இது அவ கர்ப்பமாகிற நாலாவது முறை. முதல் மூனு தடவை மூனு, நாலு மாசத்துலயே அபார்ஷன் ஆயிருச்சு. இந்தத் தடவை அஞ்சாவது மாசத்திலிருந்து பிரஷர் அதிகமாகி மருந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தா.”

“நாலாவது கர்ப்பமா?! மீனாட்ச்சிக்கு இப்ப என்னம்மா வயசு?” என்று குறுக்கிட்டுக் கேட்டாள் ரேவதி.

“இருபத்திநாலு நடக்குதும்மா”

“இருபத்திநாலுதானா?! கல்யாணம் ஆகி எத்தனை வருஷமாச்சு?”

“அது ஆச்சும்மா ஆறு வருஷம்.”

“பதினெட்டு வயசிலேயே கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்களா?”

“ஆமாம்மா. எப்படி இருந்தாலும் அத்தை மகனைத்தானே கட்டிக்க போறான்னு ப்ளஸ் டூ படிச்சு முடிச்சதும் கல்யாணம் செஞ்சு வச்சுட்டோம்.”

“சரி. இந்த முறை கர்ப்பமான ஆரம்பத்திலிருந்தே டாக்டரை பார்த்தீங்களா?”

“கர்ப்பமானதே கலைவாணி அம்மாகிட்ட டிரீட்மெண்டு எடுத்துதானே!”

“Dr. கலைவாணி மகப்பேறு மருத்துவரா? அவங்களேதான் முந்தைய மூணு தடவையும் பார்த்தாங்களா?”

“அமாம்மா. அதே டாக்டரம்மாதான். எங்க ஊர்ல நல்ல ராசியான டாக்டர்ன்னு அவிங்களுக்கு நல்ல பேரும்மா. மூணு அபார்ஷன் ஆனதுக்கப்புறம் இந்தத் தடவை கர்ப்பமாகி இவ்வளவு தூரம் வந்ததே அவிங்க கை ராசின்னுதான் சொல்லணும். மீனாட்சிக்கு பிரஷர் வந்ததுமே பத்து மாசத்துக்கு முன்னையே டெலிவரி ஆகிடறது கொழந்தைக்கும் அம்மாவுக்கும் நல்லதுன்னு டாக்டரம்மா சொன்னாங்க. ஏழு மாசத்துல செக்கப்புக்கு போனப்ப கொழந்தையச் சுத்தி நீர் கம்மியா இருக்குன்னு சொல்லி ஸ்கான் பன்னி பார்க்கச் சொன்னாங்க. நீர் கம்மியாத்தான் இருந்தது. கொழந்தை எடையும் கம்மியா இருக்குன்னு சொன்னாங்க. பிரஷர் அதிகமா இருந்து, பொண்ணு ஒடம்பெல்லாம் நீர் கோர்த்து ஊதிப்போயிருந்துச்சு, வீட்ல போய் பெட் ரெஸ்ட்ல இருக்கனும்னு மிரட்டி அனுப்பிச்சாங்க. அதனாலதான் வளைகாப்பை சீக்கிரமா வச்சு எங்க வீட்டுக்கு கூட்டீட்டு வந்துட்டோம். எட்டு மாசம், அதாம்மா இந்த மாசம், முடியும்போது பிரஷர் ஜாஸ்த்தியா இருந்தா ஆஸ்பத்திரியில பெட்டுல சேற வேண்டியிருக்கும்னு சொன்னாங்க. என் மகன் கிட்ட கொழந்தை எடை ஒழுங்கா ஏறலைன்னா பிரசவமானதும் அதுக்கு கண்ணாடி பெட்டியில வச்சு வைத்தியம் பார்க்க வேண்டியிருக்கும், அதனால அந்த வசதியெல்லாம் இருக்கிற பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடறேன்னு தனியா கூப்பிட்டு சொல்லியிருக்காங்க.”

“சரி. உங்க டாக்டர் கலைவாணி கிட்ட பார்த்த சீட்டெல்லாம் எடுத்துட்டு வந்தீங்களா?”

“எல்லாம் ஒரு பையில போட்டு வச்சிருந்தேன். மாப்பிள்ளை அதை எடுத்துட்டு வந்திருக்கார்.”

“அப்படியா. சரி. கொஞ்ச நேரம் இங்கேயே உட்கார்ந்திருங்கம்மா. நான் போய் டாக்டர் ரமேஷை பார்த்து இதெல்லாம் சொல்லீட்டு உங்க மாப்பிளையையும் மேலெ வரச் சொல்கிறேன்.” என்று சொல்லி எழுந்து வெளியே சென்றாள் ரேவதி.

வெளிக்கதவை திறந்து ரேவதி வருவதை உட்கதவின் கண்ணாடி வழியாகக் கவனித்த ரமேஷ், அவளை வெளி அறையிலேயே இருக்கும்படி சைகை செய்தார்.

“செல்வி, நான் போய் attenders கிட்ட பேசி விட்டு வர்றேன், பார்த்துக்க,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

வெளி அறையின் சுவற்றில் மாட்டியிருந்த தொலைபேசியில் ரேவதி அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்தாள். “Hello. Dr. Revathi here. நீங்க யாரு?…ஓ, ராதா சிஸ்டரா… Good morning… Sister, Emergency delivery ஆச்சே, மீனாட்ச்சி, அந்தப் பொண்ணுக்கு fits வந்ததாமே? இப்ப எப்படி இருக்காங்க? … ICU-க்கு போயாச்சா. யார் பார்க்குறாங்க?… OK, நான் அங்கேயே கேட்டுக்கறேன். அந்தப் பொண்ணோட husband அங்கே இருந்தா… ஓ. இங்கேதான் வந்திருக்காறா, சரி நான் பார்த்துக்கறேன். Thanks.” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தாள்.

திரும்பி ரமேஷை பார்த்துப் புன்னகைத்து, “Hello again, Dr. Ramesh. A busy morning has become busier, இல்லையா?!”

அவளைப் பார்த்து ரமேஷும் புன்னகைத்து, “Good morning Revathi. NICU setting-ல இதெல்லாம் சகஜம்தானே! History, pregnancy details ஏதாச்சும் கிடைச்சுதா?” என்று கேட்டார்.

“Yes. Delivery ஆன பொண்ணு பெயர் மீனாட்ச்சி, அவளோட அம்மா கிட்ட பேசினேன். She’s 24. Consanguineous marriage1. அத்தை, அதாவது அப்பாவோட அக்கா மகனுக்குக் கட்டிக் கொடுத்திருக்காங்க. பதினெட்டு வயசுல கல்யாணம். இது fourth pregnancy. Three previous abortions, all at 3 to 4 months gestation. Present pregnancy booked2, being seen by Dr. Kalaivani in their town. Complicated by PIH3 and IUGR4. Possible pre-eclampsia5. Case records இப்ப கையில் இல்லை. Husband கொண்டு வந்திருக்கிறதா சொன்னாங்க. Check பண்ணனும். She developed pains early this morning. Taken to Dr. Kalaivani’s hospital. She referred them to a higher centre. டாக்சியில் வரும்போதே membranes rupture6 ஆயிட்டதா அம்மா சந்தேகமா சொல்றாங்க. She’s not sure because she says there was very little liquor leakage7. Mother had one episode of what sounds like generalized seizures8 after they reached our casualty. Then she lost consciousness and delivered. இப்ப mother has been shifted to the ICU. ராதா சிஸ்டர் husband இங்கே வந்திருக்கிறதா சொன்னாங்க.”

“Wow! இவ்வளவு details கேட்டு, case present பன்ற மாதிரி சொல்லீட்டியே. Good job, ரேவதி.” சிரித்தார் ரமேஷ். “சரி என் கூட வா, husband வந்திருந்தா அவரையும் விசாரிப்போம்,” என்று சொல்லிக் கதவைத் திறந்தார்.

வெளியே இருபத்தைந்திலிருந்து முப்பது வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்து ரமேஷ், “மீனாட்சியோட வீட்டுக்காறர்…” என்று இழுத்தபடி கேட்டான்.

“சார், நான்தான் சார். என் பெயர் சுந்தர் சார்,” என்று சொல்லிக் கொண்டு அவர்களில் ஒருவன் முன்னால் வந்தான்.

“வணக்கம், நான் டாக்டர் ரமேஷ், Neonatologist, அதாவது பச்சிளம் குழந்தைகள் மருத்துவத் துறை நிபுனர்.” சுந்தரிடம் இதைச் சொல்லிக்கொண்டே அருகில் நின்றிருந்த இன்னொருவனை உற்றுப் பார்த்தார் ரமெஷ். அவனிடம், “உங்களை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கேனே?” என்று கேட்டான்.

அவன் சிரித்தபடி முன்னால் வந்து, “சார், நல்லா முகம் ஞாபகம் வச்சிருக்கீங்களே சார்!” என்றான். “ரெண்டு வருஷம் முன்னால நீங்க கோயம்பத்தூர்ல பிருந்தாவன் ஹாஸ்பிடல்ல இருந்தப்ப அடிக்கடி உங்க சீனியர் டாக்டர் செல்வக்குமாரை பார்க்க வந்திருக்கேன் சார். அப்ப மெடிக்கல் ரெப்பா இருந்தேன் சார். என் பெயர் சேகர். சுந்தரோட நன்பன் சார்.”

“அப்படியா. நல்லது! வாங்க, இங்கே உள்ளே உட்கார்ந்து பேசுவோம்,” என்று அவர்கள் இருவரையும் மீனாட்சியின் தாய் உட்கார்ந்திருந்த ஆலோசனை அறைக்கு அழைத்துச் சென்றார் ரமேஷ்.

“அந்த ரெண்டு chair இழுத்துப் போட்டு உட்காருங்க … நீங்களும் உட்காருங்க Dr. ரேவதி,” என்று சொல்லி சுழற்நாற்காலியை மேஜைக்குப் பின் தள்ளி அதில் உட்கார்ந்தார் ரமேஷ்.

“Dr. ரேவதி நீங்க சொன்னதெல்லாம் என்கிட்ட சொன்னாங்கம்மா. உங்க டாக்டரைப் பார்த்த சீட்டெல்லாம் …” என்று மீனாட்சியின் தாயிடம் கேட்டவரைக் குறுக்கிட்டு சுந்தர், “கொண்டுவந்திருக்கேன் சார். இதோ …” என்று தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து ஒரு தடித்த கோப்பை எடுத்துக் கொடுத்தான்.

அதை வாங்கி மேஜையின் மேல் வைத்து சில நிமிடங்கள் புரட்டினார் ரமேஷ். அவர் அருகில் நின்றுகொண்டு அவர் பார்த்துக்கொண்டிருந்ததை தானும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரேவதி. தேவையான தகவல்களைப் பார்த்ததும் கோப்பை மூடிவிட்டு சுந்தரையும், மீனாட்ச்சியின் தாயையும் பார்த்துப் பேசத் தொடங்கினார் ரமேஷ். “நீங்க சொன்னது, உங்க டாக்டரம்மா பார்த்திருக்கிற வைத்தியம் எல்லாத்தையும் பார்த்தா மீனாட்ச்சியோட கர்ப்பம், பிரசவத்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கணும். இப்ப அதனால குழந்தைக்கு என்ன தொந்தரவுகள் வரலாம்னு நான் முதலில் சொல்றேன். நான் முடிச்சதுக்கப்புறம் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் விளக்கம் சொல்றேன்.”

“முதல் விஷயம், நெருங்கிய சொந்தத்தில் கல்யாணம் செய்ததனாலேயே பிரச்சினைகள் தொடங்கியிருக்கும். அவங்களுக்கு இதற்கு முன் கலைந்த மூன்று கர்ப்பங்களுக்கும் அதுவே முக்கிய காரணமாக இருக்கலாம். உங்க பழைய சீட்டுப்படி Dr. கலைவாணி மீனாட்ச்சிக்கு APLS-ன்னு நாங்க சொல்ற தொந்தரவு இருக்குன்னு கண்டுபிடித்திருக்கிறார். அந்தப் பிரச்சினைக்கு வைத்தியம் செய்து இந்த முறை கர்ப்பம் தங்கியிருந்தது நல்ல விஷயம். ஆனா ஐந்தாவது மாசத்திலிருந்து இரத்தக் கொதிப்பு வந்ததனால பிரச்சினை ஜாஸ்தி ஆயிருக்கு. அம்மாவுக்கு இரத்தக் கொதிப்பு இருந்தால், அதைக் கட்டுப்படுத்தி வைத்தாலுமே குழந்தையை கண்டிப்பாக பாதிக்கும். சாதாரணமா ஆறாவது மாசத்திலிருந்து குழந்தையின் எடை வாரத்திற்கு 200 கிராம் அதிகமாகணும். அம்மாவுக்கு இரத்தக் கொதிப்பு இருந்தால் அந்த அளவுக்கு எடை அதிகமாகாது. குழந்தையை சுற்றி பனிக்குடத்தில் இருக்கும் நீர் குறைந்துவிடும். இது இரண்டுமே இந்தக் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கு. உங்க சீட்டில் குறித்திருக்கும் கடைசியாக வீட்டுக்கு தூரமான தேதிப்படி இது 32-வது வாரம், அதாவது 8 மாதம் முடியப்போகும் நேரம். 32 வாரத்திற்கு சாதாரணமாக குழந்தையின் எடை 1500-1600 கிராம் இருக்கணும். மீனட்சியோட குழந்தைக்கு இப்ப எடை பார்த்தோம். 820 கிராம் தான் இருக்கு. அதாவது 7 மாதங்களுக்கான வளர்ச்சி தான் இருக்கு.”

“இந்த மாதிரி குறை மாதத்தில் எடை மிகக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு இங்கே NICU-வில், அதாவது பச்சிளம் குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பல நாட்கள் கண்காணிக்க வேண்டி வரும். இந்தக் குழந்தைக்கு பல தொந்தரவுகள் வர வாய்ப்பிருக்கிறது. மிக முக்கியமாக, நுரையீரல் போதுமான அளவு வளர்ச்சி அடையாததால் மூச்சு விடத் தொந்தரவு வரலாம். அப்படி வந்தால் நுரையீரல் விரிவடைய விலை அதிகமான மருந்துகள் கொடுக்க வேண்டும், மோசமாக இருந்தால் முச்சுக் குழாயில் tube போட்டு ventilator, அதாவது செயற்கை சுவாச இயந்திரத்தில் பொறுத்த வேண்டிய சூழ்நிலையும் வரலாம். மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் போதுமான அளவு வளர்ச்சி அடையாததால் மூளைக்குள் இரத்தக் கசிவு ஏற்படலாம். குழந்தைக்கு பால் குடிக்கப் பிரச்சினை வரலாம்.

குழந்தை ஒரு பிரச்சினையும் இல்லாமல் சுயமாக மூச்சு விட்டு, பால் குடித்து, நன்றாக இருக்கும் வரை இங்கே NICU-வில் கண்டிப்பாக இருக்க வேண்டும். உள்ளே வைத்திருந்தால் ஒரு நாளுக்கு சுமார் எழுநூற்று ஐம்பது ரூபாய் செலவாகும். இது போக மருந்துகள், ட்ரிப்ஸ் போன்றவைகளை தேவைக்கு ஏற்றபடி நீங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும். தோராயமாக ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக் கொள்ளலாம். நான் ஏற்கனவே சொன்ன பிரச்சினைகள் ஏற்பட்டால் செலவு அதிகம் ஆகும். Ventilator மாட்டினால் ஒரு நாளுக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகும். இந்த அளவிற்கு செலவு செய்ய உங்களுக்குக் கஷ்டம் என்றால் சொல்லுங்கள் இன்று ஒரு நாள் பார்த்துவிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகிறேன்.” என்று சொல்லி, “இனி உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.” என்றார்.

தொடரும்…

வாசக நண்பர்களுக்கு: முதல் மூன்று பாகங்களுக்கு பதிவில் மறுமொழியாகவும் ட்விட்டரிலும் நண்பர்கள் சிலர் சொன்ன கருத்துக்களை ஏற்று சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். முதலாவதாக ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கிறேன். கதாபாத்திரங்களின் பேச்சில் ஆங்கிலம் அதிகமாக உள்ளதாக ஒரு கருத்து. இது என்னைப் பொறுத்த வரையில் தவிர்க்க முடியாத விஷயம். இன்றைய நிலையில் (என் மானசீக குருநாதர் பேயோன் சமகாலத்தில் என்பார்) ஒரு மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் எப்படி பேசிக்கொள்கிறார்களோ அப்படியே எழுதியிருக்கிறேன். அதனால் தான் முதல் இரண்டு பாகங்களில் நீளமான அடிக்குறிப்புகளில் விளக்கம் அளித்திருந்தேன். அடிக்குறிப்புகளின் நீளத்தை குறைத்துவிட்டேன். கதையில் உபயோகித்திருக்கும் மருத்துவத் துறை கலைச்சொற்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு கதையிலேயே விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறேன்.

அடிக்குறிப்புகள்:

இந்தக் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மருத்துவத்துறையில் நான் பார்த்த நிகழ்வுகளையும், சந்தித்த நபர்களையும் ஒட்டி நான் கற்பனை செய்தவை. உன்மையான நபர்களையோ சம்பவங்களையோ குறிப்பவை அல்ல.

நான் உபயோகித்திருக்கும் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட சொற்களை இந்த குறிப்புகளில் விவரிக்கிறேன். பல மருத்துவக் கலைச்சொற்களை தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் கலைச்சொற்கள் பட்டியலில் இருந்து எடுத்தேன்.

  1. Consanguineous marriage – நெருங்கிய இரத்த உறவினருடன் திருமணம்.
  2. Booked Pregnancy – கர்ப்பம் தரித்ததில் இருந்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரைப் பார்த்திருக்கிறார்கள் என்று குறிக்கும்.
  3. PIH – Pregnancy Induced Hypertension – கருவுற்றதால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம்.
  4. IUGR – Intra-Uterine Growth Retardation – கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி குன்றியுள்ளதை குறிக்கும்.
  5. Pre-eclampsia – பேற்றுக்கு முன் மருட்சி. இது இரத்த அழுத்தம் அதிகமாக (மேலே குறிப்பிட்டுள்ள PIH) இருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும்.
  6. Rupture of Membranes – பிரசவத்தின் பொழுது பனிக்குடம் உடைதல்.
  7. Liquor amnii – also known as Amniotic Fluid – பனிக்குட நீர் – கருப்பையில் குழந்தையைச் சுற்றி இருக்கும் நீர்.
  8. Generalized seizures – கால்-கை வலிப்பு.

ஜூன் 20, 2010

உலக நாயகன் – 3

Filed under: கதை,மருத்துவம்,Fiction,Medicine,Tamil — Vijay @ 11:41 பிப

முன்கதை: உலக நாயகன் – 1, 2

நஞ்சுக்கொடியில் catheter பொட்டு முடித்ததும் கையுறையைக் கழற்றிக் கொண்டே உஷாவிடம், “ஒரு Order Sheet எடும்மா, IV fluids (ட்ரிப்ஸ்), medicines and monitoring instructions எழுதிடறேன்,” என்று சொல்லிவிட்டு நிதானமாகக் குழந்தையை முழுவதுமாக பரிசோதிக்க ஆரம்பித்தார் ரமேஷ்.

Order sheet-ட்டுடன், TPR chart, IO chart,1, 2 மற்றும் சில வெற்றுத் தாள்களையும் NICU-வில் ஆண் குழந்தைகளுக்காகப் பயன்படுத்தும் இளநீல பிளாஸ்டிக் கோப்பினுள் இணைத்து, சுவற்றில் பதித்திருந்த பளிங்கு மேஜையில் வைத்து விட்டு, “சார் admission போட்டு வந்ததும் நீங்க case notes எழுதுனதுக்கப்புறம் இதுல சேர்த்துக்கறேன். இப்போதைக்கு orders எழுதீருங்க,” என்று ரமேஷிடம் சொன்னாள்.

“செல்வி, இந்தக் குழந்தையை பத்திரமாக பார்த்துக்கனும். நேத்து Caesarean delivery ஆன குழந்தையும், அந்த நல்லாயிருக்கிற neonatal jaundice baby-யும் இப்பவே வெளிய ward-க்கு மாத்தீறு,” என்று சொல்லிக்கொண்டே மேஜை அருகில் வந்து கோப்பை திறந்து எழுத ஆரம்பித்தார் ரமேஷ். வேகமாக எழுதிக்கொண்டு இரு செவிலியர்களுக்கும் கேட்கும்படி தொடர்ந்து சொன்னார், “இப்பவே radiology-ல சொல்லி ஒரு bedside check x-ray எடுக்க சொல்லீடுங்க, warmer probe-ஐ நெஞ்சில் ஒட்டீட்டு temperature maintain ஆகுதான்னு பார்த்துக்கங்க, 15 நிமிஷத்துக்கு ஒரு முறை heart rate, respiratory rate record பண்ணீருங்க, hood-க்கு oxygen full flow-ல வச்சிருங்க, குழந்தை urine, meconium3 போகிற நேரத்தைக் குறிச்சுக்கோங்க, நாளைக்கு காலை நான் வர்றதுக்கு முன்னாடி repeat bedside x-ray ஒன்னு எடுத்துருங்க.” சொல்லி முடித்துவிட்டு மௌனமாக மருந்துகள் மற்றும் இரத்தப் பரிசொதனைகளுக்கான உத்தரவுகளை சில நிமிடங்களில் எழுதினார்.

செல்வி தொலைபேசியில் கூப்பிட்டு, ரமேஷ் குறிப்பிட்ட இரண்டு குழந்தைகளையும் வெளியே குழந்தைகள் சிகிச்சை பிரிவிற்கு மாற்றும் ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தாள்.

எழுதி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்கும் பொழுது மாணவி ராணி NICU-விற்குள் வந்திருந்ததை கவனித்த ரமேஷ் அவளை நோக்கி, “ஏம்மா attender யார் வந்திருக்காங்க?” என்று கேட்டார்.

“ச… சார், baby-யோட பாட்டி சார்,” என்று பதட்டத்தோடு சொன்னாள். டாக்டர் ரமேஷ் ராணியிடம் நேரடியாகப் பேசுவது இதுவே முதல் முறை. அவளுக்கு NICU-வில் இருக்கும் மூத்த செவிலியர்களிடம் பேசுவதற்கே பயம். மருத்துவரிடம் பேசுவதைப் பற்றி கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.

அவள் முகத்திலும் குரலிலும் தெரிந்த பயத்தை கவனித்த ரமேஷ் மெலிதான புன்னகையுடன் அவளிடம், “பாட்டின்னா யாரும்மா?” என்று மெதுவாகக் கேட்டான். துளியும் பதட்டம் குறையாமல், “ச… சார்,  delivery ஆன பொண்ணோட அம்மான்னு சொன்னாங்க சார்,” என்று சொன்னாள் ராணி.

“ஓ, அப்படியா!” என்று சொன்ன ரமேஷ், தொடர்ந்து, “செல்வி, Casualty-க்கு கூப்பிட்டு குழந்தையோட அப்பாவை மேலே அனுப்பச் சொல்லு. ரேவதி கிட்ட History கேட்டுட்டு நான் அவருக்கு baby-யோட இப்போதைய condition, future prognosis4 explain பண்ணனும். செலவு எவ்வளவு ஆகும், அவரால் செலவு செய்ய முடியுமான்னும் கேக்கணும்.”

“Ok, Doctor.” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தொலைபேசி பக்கம் திரும்பினாள் செல்வி.

ஆலோசனை அறைக்குள் மீனாட்சியின் தாயை அழைத்துச் சென்ற மருத்துவர் ரேவதி அங்கிருந்த மேஜையின் முன் இருந்த நாற்காலியில் அவரை அமர்த்திவிட்டு, ஃபேன் பொத்தானை அழுத்திவிட்டு, மேஜைக்கு மறுபுறமிருந்த சுழற்நாற்காலியை இழுத்து அவர் அருகில் அமர்ந்து கொண்டாள். மீனாட்சியின் தாய் மறுபடியும் ஏதோ கேட்க வாயைத் திறப்பதை கவனித்த ரேவதி அவசரமாக, “அம்மா, நான் இங்கே Junior Doctor. குழந்தைகள் specialist Dr. ரமேஷ் இப்போ உள்ளே குழந்தையைப் பார்த்துக் கிட்டிருக்கார். அவர் வந்து குழந்தை எப்படி இருக்குன்னு உங்களுக்கு விவரம் சொல்லுவார். இப்ப எனக்கு நீங்க கொஞ்சம் விவரங்களை சொல்லணும். நான் கேட்கிற கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிஞ்ச அளவுக்கு பதில் சொல்லுங்க,” என்று சொல்லி, மேஜை மேல் இருந்த ஒரு வெற்றுத் தாளை தன் அருகில் இழுத்து வைத்து, கையில் பேனாவை எடுத்துக் கொண்டாள்.

“சரிம்மா,” என்று சொன்னார் மீனாட்சியின் தாய்.

உடனே முதல் கேள்வியை கேட்டாள் ரேவதி, “எத்தனை மாசம் பிரசவம்மா? கடைசியா மீனாட்சி வீட்டுக்கு தூரமான தேதி உங்களுக்கு தெரியுமா?”

“தூரமான தேதி தெரியாதும்மா. அது எங்கூர் ஆஸ்பத்திரிச் சீட்டுல எழுதியிருக்கும். எழு மாசம் முடிஞ்சு எட்டு நடக்குதும்மா.”

“ஓ. எட்டு மாசம்தான் ஆகுதா. இன்னைக்கு என்ன ஆச்சுன்னு உங்களுக்கு தெரியுமா? மீனாட்சி எங்க இருந்தா? உங்க வீட்லையா இல்ல அவங்க வீட்லையா?”

“அதான் அப்பவே சொன்னேனெம்மா. போன மாசம்தான் வளைகாப்பு செஞ்சாங்க. அப்புறம் ஒரு வாரம் கழிச்சு எங்க வீட்டுக்கு கூட்டியாந்துட்டோம். ஆனா ஒரே ஊருதான்ம்மா. ரெண்டு தெரு தள்ளியிருக்கும் எங்க வீட்டுக்காரரோட அக்கா பையனுக்குத்தான் கட்டிக் கொடுத்திருக்கோம். நேத்து ராத்திரி படுக்கப் போறப்ப நல்லாதாம்மா இருந்தா. என் பக்கத்துலதான் படுத்திருந்தா. ஒன்னும் பிரச்சினைன்னு சொல்லலை. விடியக் காத்தால என்னை எழுப்பி, அம்மா அடி வயிறு வலிக்குதும்மான்னு சொன்னா. நானும் எழுந்திருச்சுப் போய் ஒரு கிளாஸ் தண்ணி எடுத்து வந்து கொடுத்து குடிக்கச்சொல்லிவிட்டு பத்து நிமிஷம் பார்த்தேன். வலி குறையலைன்னு சொன்னா. அப்புறம் எங்க வீட்டுக்காறரை எழுப்பி மாப்பிள்ளைய செல்போன்ல கூப்பிடச் சொன்னேன்.”

“அவரு வரும்போதே ஆட்டோ ஒன்னு கூட்டீட்டு வந்துட்டார். அந்த ஆட்டோவிலேயே எங்க டாக்டரம்மா ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டுப் போனோம். போகிற வழியில் அவங்களுக்கும் ஃபோன் போட்டுப் பேசினோம். சரி நான் வந்து பார்த்துடறேன்னு சொன்னாங்க. அவங்களோட ஆஸ்பத்திரியில போய் நாங்க சேர்ந்து பத்து நிமிஷத்துக்குள்ள அந்தம்மாவும் வந்துட்டாங்க. டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு, பிரசவ வலிதான், இவ்வளவு சீக்கிரம் வலி வந்தது கொழந்தைக்கு நல்லதில்லை, நீங்க பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போயிருங்கன்னு சொல்லீட்டாங்க. அப்புறம் ஒரு கால் டாக்சி புடிச்சு இங்கே வந்தோம்.”

“எங்க ஊரிலிருந்து இங்கே வர முக்கால்மணி நேரம் ஆச்சும்மா. அவ்வளவு நேரமும் வலி, வலின்னு அனத்திக்கிட்டே வந்தா. இங்கே வந்து உங்க எமர்ஜன்சி ரூம்ல படுக்கவச்சுட்டு நர்ஸ்கிட்ட என்ன விஷயம்னு சொல்லிக் கிட்டிருக்கும்போது திடீர்னு ஜன்னி வந்த மாதிரி கையும் காலையும் இழுத்துக்கிட்டு நினைவில்லாம போயிட்டாம்மா.”

இத்தனை நேரம் மீனாட்ச்சியின் தாய் சொல்லிக்கொண்டிருப்பதை கதை கேட்பது போல் “உம்” கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்த ரேவதி திடுக்கிட்டு, “என்னது?! ஜன்னி வந்துச்சா?!” என்று கேட்டாள்.

தொடரும்…

தொடர்ச்சி: உலக நாயகன் – 4

அடிக்குறிப்புகள்:

இந்தக் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மருத்துவத்துறையில் நான் பார்த்த நிகழ்வுகளையும், சந்தித்த நபர்களையும் ஒட்டி நான் கற்பனை செய்தவை. உன்மையான நபர்களையோ சம்பவங்களையோ குறிப்பவை அல்ல.

கதைதான் என்றாலும், நான் உபயோகித்திருக்கும் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட சொற்களை இந்த குறிப்புகளில் விவரிக்கிறேன்.

  1. TPR chart – Temperature, Pulse, Respiratory rate chart – உடல் வெப்பம், இருதயத் துடிப்பு அளவு, நிமிடத்திற்கு எத்தனை முச்சு என்ற அளவு குறிக்கும் தாள்.
  2. IO chart – Intake-Output chart – வாய் வழியாகவும், ட்ரிப்ஸ் வழியாகவும் கொடுக்கப்படும் நீர் அளவு, சிறுநீர் அளவு குறிக்கும் தாள்.
  3. Meconium – காட்டுப் பீ, பிறந்த குழந்தையின் முதல் மலக் கழிச்சல்.
  4. Prognosis – முன் கணிப்பு, நோய் தாக்கக் கணிப்பு, சிகிச்சை முடிவுக் கணிப்பு.

ஜூன் 16, 2010

உலக நாயகன் – 2

Filed under: கதை,மருத்துவம்,Fiction,Medicine,Tamil — Vijay @ 1:49 பிப

முன்கதை: உலக நாயகன் – 1

வேகமாகப் பார்த்ததில் ட்ரிப்ஸ் போடுவதற்கு ஏதுவாக குழந்தையின் கைகள், கால்கள் மற்றும் மண்டையில் ரத்த நாளங்கள் எதுவும் டாக்டர் ரமேஷுக்குத் தென்படவில்லை. அறுத்துத் தற்காலிகமாக அடைத்து வைக்கப் பட்டிருக்கும் நஞ்சுக் கொடியிலே உள்ள ரத்த நாளத்திலேயே ட்ரிப்ஸ் போட குழாயை பொருத்திவிடலாம் என்று முடிவு செய்து, பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ் உஷாவிடம், “Umbilical catheter1 போட tray ready பண்ணும்மா!” என்று சொன்னார்.

இடைப்பட்ட நேரத்தில் Pulse-oximeter probe-பை பொருத்திவிட்டு stethoscope-பைக் குழந்தையின் நெஞ்சில் வைத்துக் கேட்டுவிட்டு நிமிர்ந்த நர்ஸ் செல்வி, “Respiratory rate 60, Lungs clear, Heart rate 140, No murmurs, O2 saturation 94,”2,3,4,5,6 என்று ரமெஷிடம் சொல்லிவிட்டு, கொஞ்சம் விலகி நின்று இந்தக் கலவரத்தை மிரண்ட விழிகளுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த NICU-விற்கு சில நாட்களுக்கு முன் வந்து சேர்ந்த மூன்றாம் ஆண்டு செவிலியத்துறை மானவியிடம், “ரானி, hand wash7 பண்ணீட்டு, weighing machine-ல clean towel ஒன்னு போட்டு இங்க எடுத்துட்டு வா.” என்று கட்டளையிட்டாள்.

ரமேஷ் கை கழுவி கையுறை அணிந்து catheter tray-யிலிருந்த சாதனங்களை சரி பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தையை வார்மரிலிருந்து எடுத்து எடை பார்த்துவிட்டு, “டாக்டர், வெறும் 820 கிராம்தான் இருக்கு,” என்று சொன்ன செல்வியின் குரலில் லேசான கலக்கம் இருந்தது. இதைக் கேட்டதும் சட்டென்று தலை நிமிர்ந்து அவளைப் பார்த்த ரமேஷின் கண்களிலும் லேசான கலக்கம் இருப்பதை செல்வி கவனித்தாள்.

நஞ்சுக் கோடியில் catheter போட ரமேஷுக்கும் உஷாவிற்கும் தேவையான பொருட்களெல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று ஒரு எட்டு பார்த்துவிட்டு திரும்பிய செல்வி intercom தொலைபேசியில் அவசர சிகிச்சை பிரிவுக்கான எண்களை அழுத்தினாள். மறுமுனையில் தொலைபேசியை எடுத்து “Hello, Casualty,” என்று சொன்னது அவளது சிநேகிதி சீனியர் நர்ஸ் ராதா என்று அறிந்துகொண்ட செல்வி, “ராதா, NICU-லிருந்து செல்வி பேசறேன். இப்ப டெலிவரியாச்சே? அந்தப் பொண்ணு பெயர் என்ன? … மீனாட்ச்சியா, சரி. கூட வந்த விவரம் தெரிஞ்ச attender – புருஷனோ, அம்மாவோ – இருந்தா மேலே அனுப்பறியா, history கேக்கணும்!” மறுமுனையில் ராதா ஏதோ கேட்க, “அதை ஏண்டி கேக்கற, வெறும் 820 கிராம்தான் இருக்கு! இப்போதைக்கு நல்லாயிருக்கு! ஹ்ம்ம்…” என்று பெருமூச்சுடன் தொலைபேசியை கீழே வைத்தாள்.

“ஏய் ராணி, வெளிய வார்ட்ல டாக்டர் ரேவதி இருப்பாங்க, அவங்கள இங்கே கொஞ்சம் வரச் சொல்லேன்,” என்று எடை பார்க்கும் கருவியை அதன் இடத்தில் வைத்துவிட்டு நின்றிருந்த ராணியிடம் சொன்னாள் செல்வி.

அடுத்த சில நிமிடங்களுக்கு NICU-வில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கண்காணிப்புக் கருவிகளின் பீப் பீப் சத்தத்தைத் தவிர அமைதி நிலவியது.

ரமேஷ் உஷாவின் உதவியோடு நஞ்சுக் கோடியில் catheter போடுவதை பார்த்துக் கொண்டிருக்க செல்விக்கு நேரமில்லை. NICU-வில் ஏற்கனவே இருந்த மூன்று குழந்தைகளுக்கு காலை ரவுண்ட்ஸில் ரமேஷ் சொல்லியிருந்ததேல்லாம் செய்யவேண்டும். கையில் பேனாவை எடுத்துக் கொண்டு கேஸ் ஷீட்டுகளை புரட்டினாள். நல்ல வேளை இப்போ உள்ளே இருக்கிற மூணும் stable-ஆ இருக்கு. மூன்றில் ஒன்றையாவது டாக்டர் ரமேஷிடம் கேட்டு வெளிய வார்டுக்கு மாற்றிவிடனும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

NICU-வின் கண்ணாடிக் கதவை சிறிதளவு திறந்து தோள் நீள சுருட்டை முடி சூழ்ந்திருந்த அழகிய பெண் முகம் எட்டிப் பார்த்தது … டாக்டர் ரேவதி. போட்டிருந்த சன்னமான மூக்குக் கண்ணாடியை படு ஸ்டைலாக ஒரு விரல் நுனியில் மேலே உயர்த்திவிட்டு, வேலையில் மும்முரமாக இருந்த ரமேஷைப் பார்த்து, “Good morning Dr. Ramesh. So busy in the wards that I didn’t get to see you this morning!” என்று சொல்லிவிட்டு செல்வி இருந்த பக்கம் திரும்பி, “என்ன செல்வி சிஸ்டர், என்னை வரச்சொன்னீங்களாமே?” என்று கேட்டாள்.

ரமேஷிடம் ரேவதி கொஞ்சும் தொனியில், எதோ இன்றுதான் ந்யூ யார்க் ஃப்ளைட்டிலிருந்து இறங்கிவந்தவள் போல் அமெரிக்க உச்சரிப்பில், ஆங்கிலத்தில் பேசிவிட்டுத் தன்னிடம் கேட்டது மட்டும் ஏளனம் கலந்த அதிகாரத் தொனியில் இருந்தது போல் செல்விக்கு உறுத்தியது. மனதில் பொங்கிய ஆத்திரத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், “ஆமாம் டாக்டர். இப்பத்தான் ஒரு 820 கிராம் premature neonate8 receive பண்ணினோம். சார் umbilical line போட்டுக்கிட்டிருக்கார். Attender casualty-யிலிருந்து வந்துட்டிருக்காங்க. அவங்க கிட்ட details கேக்கணும். அதான் நீங்க இருந்தா வசதியா இருக்கும்னு கூப்பிட்டேன்.” என்று சிரித்த முகத்துடன் ரேவதியிடம் சொல்லிவிட்டு, “Baby of மீனாட்ச்சி, attender வந்துட்டாங்களான்னு பார்த்து madam கிட்ட சொல்லிடு.” என்று மறுபடியும் ராணிக்கு உத்தரவிட்டாள்.

“Oh!!” அழகாக வாயைப் பிளந்து, வலது கையின் மூன்று விரல்களால் திறந்திருந்த வாயை பாதி பொத்திக்கொண்டு, “Only 820 grams!! I’ve never seen such a small preemie in my life yaa!! Okay. I’ll go get the history.”  என்று சொல்லிக் கதவை மூடிவிட்டுச் சென்றாள் ரேவதி.

அவள் தலை மறைந்ததும், செல்வி தன் கண்களை உருட்டி, உதட்டைப் பிதுக்கி, தலையை பொம்மையைப் போல் அசைத்ததை ஓரக்கண்ணால் பார்த்து முகமூடிக்குப்பின் லேசாகச் சிரித்தார் ரமேஷ்.

NICU-வின் வெளிப்புற அறையின் கதவைத் திறந்து ரேவதி வெளியே வந்ததும் எதிரில் இருந்த குடும்பத்தார் காத்திருக்கும் அறையின் முன் ராணியின் பக்கத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண் பதட்டத்துடன் நின்றிருப்பதை கவனித்தாள்.

“நீங்க மீனாட்சியோட அம்மாவா, மாமியாரா?” என்று கேட்டு முடிப்பதற்குள் அந்தப் பெண் அவசரமாக அருகே வந்து, “நான் மீனாட்ச்சியோட அம்மாங்க. நீங்கதான் குழந்தையைப் பாத்துக்கற டாக்டரா? குழந்தை எப்படிம்மா இருக்கு? பொழைக்குமா? பொறந்ததும் பார்த்தேனே! ஒரு ஜான் அளவுகூட இல்லியே! ஐயோ!! இத்தனை கஷ்டப்பட்டு பொத்திப் பொத்திப் பார்த்தும் இப்படி எட்டு மாசத்துல பெத்துப் போட்டுட்டாளே. ஏம்மா, பொழச்சுக்குமில்ல? போன மாசந்தான் வளைகாப்பு செஞ்சோமே!” என்று படபடப்புடன் நிறுத்தாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே ரேவதியின் கையைப் பிடித்துக் கொண்டாள். அந்தப் பெண்ணின் கையை தானும் பிடித்துக் கொண்டு, “பதட்டப்படாம வாங்கம்மா, இங்கே உட்கார்ந்து பேசலாம்.” என்று சொல்லியபடி அருகில் இருந்த ஆலோசனை அறைக்கு அழைத்து சென்றாள் ரேவதி.

தொடரும்…

தொடர்ச்சிஉலக நாயகன் – 3

அடிக்குறிப்புகள்:

இந்தக் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மருத்துவத்துறையில் நான் பார்த்த நிகழ்வுகளையும், சந்தித்த நபர்களையும் ஒட்டி நான் கற்பனை செய்தவை. உன்மையான நபர்களையோ சம்பவங்களையோ குறிப்பவை அல்ல.

கதைதான் என்றாலும், நான் உபயோகித்திருக்கும் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட சொற்களை இந்த குறிப்புகளில் விவரிக்கிறேன்.

  1. Umbilical vein catheterization – குழந்தைகளுக்கு ட்ரிப்ஸ் போட கைகள், கால்கள் அல்லது மண்டையில் (scalp vein) உள்ள ரத்த நாளங்களில் கதீடர் (intravenous [IV] catheter/cannula) என்றழைக்கப்படும் சிறு குழாய் பொருத்தப்படும். பச்சிளம் குழந்தைகளுக்கு நஞ்சுக் கொடியில் உள்ள மூன்று ரத்த நாளங்கள் (1 சிரை / vein , 2 தமனிகள் / arteries) முழுவதுமாக மூடி செயலிழந்து போக ஒரு வாரம் ஆகும். ட்ரிப்ஸ் போட வேறு எங்கும் சிரை (vein) கிடைக்கவில்லை என்றால் நஞ்சுக் கொடியில் இருக்கும் சிரையில் சிறிய குழாய் ஒன்று பொருத்தப் படும். இது கண்டிப்பாக NICU-வில் மருத்துவர் முன்னிலையில் தான் செய்யவேண்டும். இது போல் கதீடர் (catheter) போடுவதற்கு, மற்ற மருத்துவக் காரியங்களைச் செய்வதற்கு (medical procedures) தேவையான சாதனங்களை கட்டி ஸ்டெரிலைஸ் (sterilize – நுண்ணுயிரகற்றல்) செய்து வைத்திருப்பார்கள். அவைகளை பேக் அல்லது ட்ரே (pack or tray) என்று சொல்லுவது வழக்கம். உதாரணமாக – காயங்களுக்குத் தையல் போடுவதற்கு உபயோகமாகும் பொருட்கள் சூச்சரிங் ட்ரேயில் (suturing tray/pack) இருக்கும்.
  2. Respiratory rate – ஒரு நிமிடத்தில் குழந்தை எத்தனை முறை மூச்செடுக்கிறது என்ற அளவு. சாதாரனமாக, பிறந்தவுடன் குழந்தை நிமிடத்திற்கு சுமார் முப்பதிலிருந்து அறுபது மூச்சுக்கள் எடுக்கும்.
  3. Lungs clear – இரண்டு பக்கமும் நுறையீரலில் மூச்சுச் சத்தம் நன்றாக கேட்கிறது. சந்தேகப்படும்படி வேறு சத்தம் எதுவுமில்லை.
  4. Heart rate – நிமிடத்திற்கு இருதயத் துடிப்பு எவ்வளவு உள்ளது என்ற அளவு. பிறந்த குழந்தைக்கு சுமார் நூறிலிருந்து நூற்று அறுபது இருக்கும்.
  5. Heart murmur – stethoscope-பில் இதய சுருங்கல், மற்றும் இதய விரிவு ஒலிக்கு (லப் டப்) மேலதிகமாகக் கேட்கும் ஒலிகள். இவை சாதாரணமாகவும், இதயத்தில் ஓட்டை போன்ற நோய் இருந்தாலும் கேட்கலாம்.
  6. O2 saturation – Pulse-oximeter கறுவியின் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு.
  7. கை கழுவுதல்Hand Washing – பச்சிளம் குழந்தைகள் காப்பகத்தில் மிக முக்கியமான சடங்கு. இதை பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம். காப்பகம் சுத்தமான நுண்ணுயிரற்ற இடமாக இருக்க வேண்டும் (sterile zone). காப்பகத்தின் உள்ளேயே வேலை செய்யும் செவிலியர்களுக்கு அறுவை சிகிச்சை அரங்கில் உடுத்துவது போல் தலைக்கு தொப்பி முகமூடியுடன் பிரத்யேகமான சீருடை இருக்கும். பல மருத்துவமனைகளில் உள்ளே பணியாற்றும் மருத்துவர்களுக்கும் சீருடை இருக்கும். சிறிய மருத்துவமனைகளில் அல்லது ஓரிரு குழந்தை நல மருத்துவர்களே இருக்கும் இடங்களில் மருத்துவர்(கள்) அடிக்கடி வெளியே சென்று வருமாறு இருக்கும். அவர்கள் காப்பகத்தினுள் வரும்பொழுது அணிந்திருக்கும் சாதாரண உடையை முழுவதுமாக மூடக் கூடிய பெரிய அங்கி (gown) மற்றும் தொப்பி முகமூடி அணிந்து வருவார்கள். வெளியே போட்டுக்கொள்ளும் காலணிகளை உள்ளே அணிந்து செல்லக் கூடாது. உள்ளே அணிந்து செல்ல செருப்புகள் இருக்கும். குழந்தைகளைப் பார்க்க பார்வையாளர்களை அனுமதிக்க மாட்டார்கள். ஒரு நாளுக்கு ஒரு முறை குழந்தையின் தாய் அல்லது தந்தையை அழைத்து கண்ணாடி கதவிற்கு வெளியே இருந்தபடி குழந்தையை பார்க்க அனுமதிப்பார்கள். குழந்தைகளை தொடுவது யாராக இருந்தாலும் சோப்புப் போட்டு தண்ணீரில் அல்லது ஆல்கஹால் உள்ள திரவத்தை (Hand sanitizer containing alcohol) உபயோகித்துக் கை கழுவிவிட்டுத்தான் தொடவேண்டும். ஒரு குழந்தையைப் பார்த்துவிட்டு அடுத்த குழந்தையைத் தொடுவதற்கு முன் மறுபடியும் கை கழுவ வேண்டும். வெளியிலிருந்தும், ஒரு குழந்தையிடமிருந்து இன்னொரு குழந்தைக்கும் கிருமிகள் பரவாமலிருக்க இந்த முன்னெச்சரிக்கைகள் தேவை.
  8. Premature Neonate / Preterm Baby / Preemie – குறை பிரசவத்தில், 37 வாரங்களுக்கு முன் (அதாவது 9 மாதங்களுக்கு முன்) பிறக்கும் குழந்தை. குறைப் பிரசவக் குழந்தைகளில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள் பிரசவக் காலம் மற்றும் பிறக்கும் பொழுது குழந்தையின் எடை. பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புத் துறையின் வளர்ச்சியால் இப்பொழுதெல்லாம் மேலைநாடுகளில் 24 வாரத்தில் பிறக்கும் குழந்தையைக் கூட பிழைக்க வைத்து விடுகிறார்கள். நம் நாட்டில் 28 வாரங்களுக்கு முன்னும், 800 கிராம்களுக்கு குறைவான எடையுடனும் பிறக்கும் குழந்தைகள் உயிர் பிழைப்பது கஷ்டம். பொதுவாக தெரிந்த தகவல் என்றாலும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது: சாதாரணமாக 9 மாத பிரசவக் காலத்திற்கு பிறகு (37 வாரங்களுக்கு பிறகு) பிறக்கும் குழந்தைக்கு எடை 2.5 கிலோவுக்கு (2500 கிராம்) குறைவாக இருந்தால் எடை குறைவு (low birth-weight baby) என்று சொல்லுவோம்.

உலக நாயகன் – 1

Filed under: கதை,மருத்துவம்,Fiction,Medicine,Tamil — Vijay @ 10:11 முப

நர்ஸ் அவசரமாக எடுத்து வந்த அந்தக் குழந்தையைப் பார்த்ததும் டாக்டர் ரமேஷுக்கு இது பிழைப்பது கஷ்டம் என்று தோன்றியது. இந்த மருத்துவமனையில் பச்சிளம்குழந்தைகள் நிபுணராக1 ரமேஷ் வேலைக்கு சேர்ந்தபின் அவர் பார்த்ததிலேயே சிறிய குழந்தை இதுதான். நர்ஸ் குழந்தையை warmer-இல்2 கிடத்தியதும், ஆக்சிஜன் அளிக்கும் கண்ணாடிப் பெட்டியை3 குழந்தையின் தலையை முழுவதுமாக மூடும்படி பொருத்திவிட்டு, உச்சிமுதல் பாதம் வரை பார்வையை ஒட விட்டார்.

குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கே உரிய குட்டிக் குரங்கு பொன்ற பெரிய தலை, சுருங்கிய முகம். தலையில் இருந்த சில முடிகள் தோலுடன் ஒட்டிக்கொண்டிருந்தன. கண்களை இறுக்கி மூடிக்கொண்டு சிறிய சிவந்த வாயை திறந்து பூனையைப்போல் முனகிக்கொண்டிருந்தது. காதுகள் மண்டையோடு ஒட்டியிருந்தன. உடலை சுற்றியிருந்த மருத்துவமனை பச்சைத் துண்டை அகற்றினார் ரமெஷ்.

ஆண் குழந்தை. எலும்பும் தோலுமாக வற்றிய உடல். விலா எலும்புகள் விரிய வேகமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. இடது நெஞ்சில் வேகமான இதயத் துடிப்பின் அதிர்வு தெரிந்தது. கை, கால், விரல்கள் எல்லாம் இருக்கவேண்டிய அளவில், இருக்கவேண்டிய இடங்களில் இருந்தன. வெட்டப்பட்ட தொப்புள் கொடியில் பொறுத்தியிருந்த க்ளிப் சரியாக இருந்தது. ரத்தக் கசிவு எதுவும் இல்லை. Vernix4 அதிகமாக இல்லை, இருந்த அளவிற்கு சுத்தமாக வெள்ளையாக இருந்தது, இது குழந்தையை துடைத்ததாலும் இருக்கலாம் என்று மனதில் எண்ணிக்கொண்டே நர்ஸிடம், “என்னம்மா history5,” என்று கேட்டார் ரமெஷ்.

குழந்தையின் வலது கால் கட்டை விரலில் சிறிய Band-aid அளவிலான pulse-oximeter probe-பை6 பொருத்திக்கொண்டே படபடவென பேச ஆரம்பித்தாள் நர்ஸ் செல்வி, “டாக்டர், பத்து நிமிஷத்துக்கு முன் Casualty-யிலிருந்து7 கால். Emergency Deliver, வந்து baby-யை receive பண்ணுங்கன்னு. நான் free-யா இருந்ததால கீழே ஒடினேன். நான் அங்கே போனப்பவே தலை வெளியே வந்திருச்சு. ரெண்டு நிமிஷத்துல full delivery ஆயிருச்சு. Baby மூச்சு விடலை, அழுகலை. Activity ஒன்னும் இல்லை.  Full delivery ஆனதுக்கப்புறம் கையில மல்லாக்க புடிச்சு முதுகுல தட்டினேன். Breathing and cry ஆரம்பிச்சுருச்சு. மூக்கிலும், வாயிலும் suction8 போட்டேன். Placenta9 வெளியே வந்ததும், cord10 cut பண்ணி, clamp பண்ணிட்டு, குழந்தையை தூக்கிட்டி NICU-க்கு ஒடி வந்துட்டேன்.” இன்னும் மூச்சு இரைத்துக் கொண்டிருந்தது அவளுக்கு.

ட்ரிப்ஸ் போடுவதற்கு ஏதுவாக ஏதாவது ரத்த நாளம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார் ரமேஷ்.

தொடரும்…

தொடர்ச்சி: உலக நாயகன் – 2

அடிக்குறிப்புகள்:

இந்தக் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மருத்துவத்துறையில் நான் பார்த்த நிகழ்வுகளையும், சந்தித்த நபர்களையும் ஒட்டி நான் கற்பனை செய்தவை. உன்மையான நபர்களையோ சம்பவங்களையோ குறிப்பவை அல்ல.

கதைதான் என்றாலும், நான் உபயோகித்திருக்கும் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட சொற்களை இந்த குறிப்புகளில் விவரிக்கிறேன்.

  1. பச்சிளம்குழந்தைகள் நிபுணர் – Neonatologist – பிறப்பில் இருந்து ஒரு மாதத்திற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கான மருத்துவத் துறை நிபுணர். பெரும்பாலும் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் (NICU – Neonatal Intensive Care Unit – பச்சிளம் குழந்தைகள் காப்பகம்) வைத்துப் பார்த்துகொள்பவர்.
  2. வார்மர் (warmer) – முன்னெ இன்க்யுபெடர் (incubator) என்று அழைக்கபட்ட பச்சிளம்குழந்தைகளை பராமரிக்க உபயோகபடுத்தப்படும் கண்காணிப்புக் கருவிகள் (monitor) மற்றும் சூடாக வைத்துக்கொள்ள விளக்குகள் பொருத்தப்பட்ட சிறு படுக்கை.
  3. ஆக்சிஜன் (பிரானவாயு) அளிக்கும் கண்ணாடிப் பெட்டி – ஆக்சிஜன் ஹுட் (Oxygen hood).
  4. Vernix – முழுப் பெயர் வெர்னிக்ஸ் கெஸியோஸா (vernix caseosa) கருவில் குழந்தையின் சருமத்தில் ஒட்டியிருக்கும் வெள்ளையான தயிர் போன்ற திரவம்.
  5. History – மருத்துவத்தில், இதுவரை நடந்தது என்ன என்பதற்கு உபயோகபடுத்தப்படும் வார்த்தை.
  6. பல்ஸ்-ஆக்ஸிமீட்டர் ப்ரோப் – (pulse-oximeter probe) – குழந்தையின் இருதய துடிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை கண்காணிக்கும் கருவி. பெரும்பாலும் கால் கட்டை விரலின் மேல் மடக்கிப் பொருத்தி ப்ளாஸ்த்திரி சுத்திக் கட்டிவிடுவார்கள்.
  7. Casualty – அவசர சிகிச்சைப் பிரிவு. அமெரிக்காவில் எமெர்ஜன்சி ரூம் / டிபார்ட்மெண்ட் (ER / ED)
  8. Vacuum suction – குழந்தையின் முக்கிலும் வாயிலும் விட்டு உறிஞ்சி சுத்தப்படுத்த உபயோகிக்கப்படும்.
  9. Placentaநஞ்சு
  10. Umbilical cord – நஞ்சுக்கொடி அல்லது தொப்புள் கொடி.

ஜூன் 3, 2010

எம்.ஆர்.ஐ ஸ்கான் – பாகம் 2

பாகம் 1 இங்கே உள்ளது.

முதல் பாகத்தின் பின்னூட்டங்களில் நண்பர்கள் கொத்தனாரும், ஆயில்யனும், “படம் வரைந்து பாகம் குறித்தால் இன்னும் தெளிவு கிடைக்கும்.” என்று கேட்டிருந்தார்கள். கீழே மூன்று படங்களை இணைத்துள்ளேன். நான் வரையவில்லை, தமிழில் பெயர்கள் மட்டும் எழுதினேன்.

[படம் இங்கிருந்து எடுத்து மாற்றியது]

[படம் இங்கிருந்து எடுத்து மாற்றியது]

[படம் இங்கிருந்து எடுத்து மாற்றியது]

மீகடத்திக்காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களில்தான் உளுந்து வடை (டோன்ட் / donut) உருவத்தில் கான்றியும் (gantry) பீப்பாய் போன்ற நீளமான துவாரமும் இருக்கும் (மேலே முதல் மற்றும் மூன்றாவது படங்களில் உள்ளது போல்). இருட்டான சிறிய குகை போல் உள்ள இந்த இடத்தில் படுக்கவைத்து ஸ்கான் எடுக்கும் பொழுது சிலருக்கு தனிமை மருட்சி (claustrophobia) ஏற்படுகிறது.

பொதுவாக நிரந்தர காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களில் கான்றி (gantry) அவ்வளவு குறுகலாக இல்லாமல் விசாலமாக இருக்கும். சில இயந்திரங்களில் (மேலே இரண்டாவது படத்தில் உள்ளது போல்) மூன்று பக்கங்கள் திறந்து இருக்கும். இவைகளுக்கு திறந்தவெளி எம்.ஆர்.ஐ (Open MRI) என்றும் பெயர் உண்டு.

நிரந்தர காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களின் காந்த சக்தி 0.5 டெஸ்லாவிற்கும் கம்மியாக இருக்கும். மீகடத்திக்காந்த எம்.ஆர்.ஐ இயந்திரங்களின் காந்த சக்தி 0.5 டெஸ்லாவிற்கும் அதிகமாக இருக்கும். காந்த சக்தியை வைத்து பார்த்தால் முறையே 0.2, 0.3, 0.4, 0.5, 1.5 மற்றும் 3 டெஸ்லா அளவில் ஸ்கான் இயந்திரங்கள் உண்டு. இதில் பொது மக்கள் முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டியது இரண்டு விஷயங்கள்:

  1. காந்த சக்தி அதிகம் உள்ள ஸ்கான் இயந்திரத்தில் எடுக்கும் படங்கள் சிறப்பாகவும் துல்லியமாகவும் இருக்கும்.
  2. காந்த சக்தி அதிகம் உள்ள ஸ்கான் இயந்திரத்தில் பரிசோதனையை சீக்கிரமாக முடித்துவிடலாம்.

மக்களுக்கு முக்கியமாகத் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இன்னொன்றும் உண்டு. காந்த சக்தியை, அதுவும் மிகவும் சக்தி வாய்ந்த காந்தங்களைக் கொண்டு ஸ்கான் செய்வதால், ஸ்கான் செய்யும் அறைக்குள் காந்த சக்திக்கு உட்படக்கூடிய உலோகத்தினால் ஆன பொருள்கள் இருக்கக்கூடாது. அவற்றை எடுத்துச் செல்லக்கூடாது. அதேபோல் மின்னணு சாதனங்களும் (electronic items – கைக்கடிகாரம்/wristwatch, செல்பேசி/mobile phone, calculator, digital diary, laptop computer, etc) எடுத்துச் செல்லக் கூடாது. கடன் அட்டை (credit card) எடுத்துச் செல்லக் கூடாது. உலோகத்தால் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கக் கூடாது. எல்லா ஸ்கான் மையங்களிலும் ஸ்கான் செய்வதற்கு முன் இவை எல்லாம் உங்களுக்கு சொல்லப்படும். நீங்கள் அணிந்து செல்லும் உடையை கழற்றிவிட்டு அவர்கள் தரும் அங்கியைத்தான் உடுத்திக் கொள்ள வேண்டும்.

உடலின் ஒரு பகுதிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்க சுமார் எட்டிலிருந்து இருபது நிமிடங்கள் ஆகும். உதாரணமாக மூளையை படம் பிடிக்க 0.2 டெஸ்லா இயந்திரத்தில் குறைந்த பட்சம் 20 நிமிடம் ஆகும், 1.5 டெஸ்லா இயந்திரத்தில் சுமார் 8 நிமிடம் ஆகும். எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுத்து அனுபவப் பட்டவர்களுக்கு இது தெரியும்; படம் பிடித்து முடிக்க எவ்வளவு நேரம் ஆனாலும், அவ்வளவு நேரமும் ஒரு துளி கூட அசையாமல் படுத்திருக்க வேண்டும். சிறிது அசைந்தாலும் படம் தெளிவற்று போய்விடும் (blur or movement artifact).

தலைவலியுடன் மூளைக்கோ அல்லது முதுகு வலியுடன் முதுகுத்தண்டுக்கோ ஸ்கான் எடுக்க செல்பவர் 20 – 25 நிமிடங்கள் அசையாமல் படுத்திருப்பது மிகவும் கஷ்டம் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.

பல தருணங்களில் பரிசோதனைக்கு வந்திருப்பவரால் அசையாமல் படுக்க முடியாது. உதாரணத்திற்கு வலிப்பு (fits, seizures), பக்கவாதம் (paralysis) உள்ளவர்கள், தலையில் அடிபட்டுள்ளவர்கள், சிறு குழந்தைகள். அப்படிப்பட்ட நேரங்களில் நோயாளிக்கு மயக்க ஊசி போட்டு படுக்கவைத்து ஸ்கான் எடுப்பதைத்தவிர வேறு வழியில்லை.

சில சமயங்களில், ஸ்கான் செய்யப்படும் உறுப்பைப் பொறுத்து, உங்களுக்கு கான்ட்ராஸ்ட் அல்லது டை (contrast / dye) என்ற மருந்து நரம்பில் ஊசி மூலம் செலுத்தவேண்டியிருக்கலாம். கேடோலினியும் (Gadolinium) என்கிற ரசாயனம் உள்ள இந்த மருந்தின் விலை அதிகம். உங்களுக்கு கொடுக்கும் பத்து மில்லிலிட்டர் (10 ml) மருந்தின் விலை சுமார் 1800 – 2000 ரூபாய் ஆகும். பொதுவாக இது ஸ்கான் விலையிலிருந்து அப்பாற்பட்டு கூடுதலாக வசூலிக்கப்படும்.

ஸ்கான் விலை என்று பேச்சு வந்துவிட்டதால் அதையும் பார்த்துவிடுவோம்.

ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்க சுமார் 5000 ரூபாய் செலவாகும் என்பது இதை படிப்பவர்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. பொதுவாக ஒரு உடல் அங்கத்திற்கு பரிசோதனை செய்ய மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் ஆகும். எம்.ஆர்.ஐ ஸ்கான் விலை பொதுவாக நிர்ணயிக்கப்படுவது பரிசோதனை செய்து முடிக்க எவ்வளவு நேரம் எடுக்கிறது என்பதை வைத்து. ஒரே நபருக்கு இரண்டு அங்கங்களுக்கு ஸ்கான் செய்யவேண்டும் என்றால், நேரம் அதிகம் ஆகும் என்பதால், இரண்டு தனி பரிசோதனைக்கான விலை.

தில்லி, மும்பை, சென்னை, பெங்களுரு போன்ற பெருநகரங்களில் விலை நான் குறிப்பிட்டிருப்பதைவிட அதிகமாக இருக்கும்.

ஒருவருக்கு பரிசோதனை முடிக்க அதிக நேரம் ஆனால், ஒரு நாளுக்கு சிலரைத்தான் பரிசோதிக்க முடியும். அதனால் சீக்கிரம் படம் எடுக்கக்கூடிய, அதாவது காந்த சக்தி அதிகம் உள்ள எம்.ஆர்.ஐ இயந்திரங்களையே என்னைப் போன்ற ரேடியாலஜிஸ்ட்கள் விரும்புவார்கள் (radiologist, தமிழாக்கம் நுண்கதிரியக்கவல்லுநர் – யாருக்கும் புரியாது).

இன்றைய நிலையில் உடலின் அனைத்து பாகங்களையும் துல்லியமாகப் படம் பிடிக்கச் சிறந்தது 1.5 டெஸ்லா இயந்திரம்தான். இதுதான் நல்ல இயந்திரம் என்றால் ஏன் எல்லா ஊர்களிலும் உள்ள மருத்துவமனைகள் அல்லது ஸ்கான் மையங்களில் 1.5 டெஸ்லா இயந்திரம் இருப்பதில்லை என்று கேள்வி எழும்.

இந்த இயந்திரங்கள் எதுவுமே நம் நாட்டில் உற்பத்தியாவது இல்லை. அமேரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. புதிதாக வாங்கினால் இவற்றின் விலை 60 லட்சத்தில் இருந்து 8 கோடி ரூபாய் வரை ஆகும். உதாரணத்திற்கு சீனாவில் தயாரிக்கப்படும் 0.2 டெஸ்லா இயந்திரத்திற்கு விலை 60 லட்சம்; அமெரிக்காவில் தயாரிக்கப்படும் 3 டெஸ்லா இயந்திரத்திற்கு விலை 8 கோடி.

நான் சிறந்தது என்று கூறிய 1.5 டெஸ்லா இயந்திரத்தின் விலை சுமார் 4 – 5 கோடி ரூபாய். இது போக மாதாமாதம் மின்சாரம் மற்றும் பராமரிப்பு செலவும் அதிகம் (சுமார் 2 – 3 லட்சம் ரூபாய் ஆகும்). குத்துமதிப்பாக சொன்னால் ஒரு நாளைக்கு குறைந்தது பதினைந்து ஸ்கான் செய்தால்தான் முதலுக்கும், பராமரிப்பிற்கும் நஷ்டமில்லாமல் இருக்கும்.

நண்பர் அலெக்ஸ் பாண்டியன் கேட்ட கேள்விகளுக்கு இந்த இரண்டு பாகங்களில் பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். மேலும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். விடை அளிக்க முயலுகிறேன்.

கட்டுரை வடிவிலேயே எழுதுங்கள் என்று சொன்ன நண்பர் டைனோவுக்கும், பிழைகளைத் திருத்திக் கொடுத்த நண்பர் கொத்தனாருக்கும் நன்றி.

இணைப்பு:

[நண்பர் கொத்தனார் பின்னூட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதிவிலேயே பதில்களை இணைத்துவிட்டேன்]

காந்தத்தின் உள்ளே இருப்பதாலோ, வனொலி அதிர்வலைகளைச் செலுத்துவதாலோ பக்க விளைவுகள் எதுவும் உண்டாகாது.

இருதயத்தில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் (pacemaker) மின்னணு இயந்திரம். அது பொருத்தியிருந்தால் எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்கக் கூடாது.

உடைந்த எலும்புகளை உலோகத் தகடுகள் கொண்டு இணைத்திருந்தால் அந்த உலோகத் தகடுகள் காந்த சக்திக்கு உட்படும் வகையா (ferro-magnetic alloy) அல்லது உட்படாத வகையா (non-magnetic alloy) என்று தெரிந்து கொண்டு முறையே ஸ்கான் செய்யக்கூடாது அல்லது செய்யலாம்.

ரத்தக்குழாய்களில் அடைப்பை நீக்கி வைக்கப்படும் ஸ்டெண்ட்களும் (vascular stent) உலோகக்கலைவைகளால் ஆனவைதான் அவற்றிற்கும் மேலே கூறிய விடை பொருந்தும்.

சமீப காலத்தில் பொருத்தப்படும் எலும்பு முறிவு சாதனங்கள் (orthopaedic prosthesis), ஸ்ட்டேன்டுகளில் (stents) எல்லாம் எம்.ஆர்.ஐ ஸ்கான் காந்த்ததினால் பாதிக்கப் படாதவைதான்

ஜூன் 2, 2010

எம்.ஆர்.ஐ ஸ்கான் – பாகம் 1

ட்விட்டரில் நண்பர் அலெக்ஸ் பாண்டியன் எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கான் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலை பதிவாக எழுதுகிறேன் என்று சொன்னேன்.

நண்பர் அலெக்ஸ் கேட்ட கேள்விகள்:

  1. எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்கும் கருவியின் விலை என்னவாக இருக்கும். எத்தனை க’ஷ்’டமர்கள் MRI எடுத்த பிறகு break-even ஆகும்.
  2. இப்பொழுதெல்லாம் பல மருத்துவர்கள் எக்ஸ்-ரே (X-ray) படம் எடுத்துப் பார்பதற்கு முன்னையே எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுத்து வரச் சொல்கிறார்களே.
  3. அதிகமாக உள்ள எம்.ஆர்.ஐ ஸ்கான் விலை குறைய வாய்ப்புள்ளதா.

ட்விட்டர் மக்களிடம் உங்களுக்கு எம்.ஆர்.ஐ பற்றி கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் சொல்லுங்கள், அதற்கும் விடை அளிக்க முயற்சிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். பல நல்ல கேள்விகளை கேட்டார்கள்.

எம்.ஆர்.ஐ ஸ்கானை பற்றி பரவலாக மக்கள் மத்தியில் இருக்கும் சில சந்தேகங்களையும் கேள்வி பதில் வடிவத்தில் எழுத முயற்சிக்கிறேன்.

எம்.ஆர்.ஐ ஸ்கான் என்றால் என்ன?

[விளக்கத்தில் அறிவியல், குறிப்பாக பௌதீகச் சொற்கள் அதிகமாக உள்ளதைப் பார்த்து பயந்து விடாதீர்கள். எனக்கும் இவை பற்றி அதிகம் தெரியாது. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கு புரியும்படியாகத்தான் எழுதியிருக்கிறேன்]

எம்.ஆர்.ஐ (MRI) என்பது மாக்னேடிக் ரெசனன்ஸ் இமேஜிங் (Magnetic Resonance Imaging) என்கிற சொற்றொடரின் சுருக்கம்.

“எம்.ஆர்.ஐ ஸ்கான்” தமிழாக்கம் என்ன என்று ட்விட்டரில் கேட்டதற்கு நண்பர்கள் மருத்துவர் புருனோ, வானம்பாடி, TBCD ஆகியோர் கொடுத்த பதில்கள்: காந்த மீளதிர்வு படம் / படமாக்கல்; காந்த அதிர்வு சோதனை/பரிசோதனை.

எம்.ஆர்.ஐ ஸ்கான் என்பது எக்ஸ்-ரே (X-ray), சி.டி. ஸ்கான் (CT scan), அல்ட்ராசவுண்ட் ஸ்கான் (Ultrasound scan), நியூக்ளியர் ஸ்கான் (Nuclear scan) போன்ற மற்ற உடல் அங்கங்களை படம் பிடித்துக்காட்டும் ஸ்கான் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

எம்.ஆர்.ஐ ஸ்கானின் முக்கிய அங்கம் ஒரு பெரிய காந்தம் (magnet) ஆகும். இது நம் குழந்தைகள் விளையாடும் நிரந்தர காந்தத்தன்மை வாய்ந்த உலோக காந்தமாகவும் (permanent magnet) இருக்கலாம், அல்லது மின்சக்தியினால் செயற்கையாக காந்தத்தன்மை பெரும் உலோகத்தால் ஆன அல்லது உலோகக்கலவையிலான (alloy) காந்தமாகவும் இருக்கலாம் (superconducting magnet, இதற்கு தூய தமிழ் பெயர் மீ கடத்திக்காந்தம்). இந்த காந்தத்திற்கு நம் விளையாட்டுக்கு உபயோகிக்கும் காந்தத்தைவிடவும், பூமியில் இயற்கையாக உள்ள காந்தப்புலனைவிட (Earth’s natural magnetic field) பல ஆயிரம் மடங்கு சக்தி அதிகம். காந்தப்புலனின் சக்தி / அளவு டெஸ்லா (Tesla = T) கணக்கில் குறிக்கப்படும். பூமியில் இயற்கையாக உள்ள கந்தப்புலனின் அளவு 0.00003 டெஸ்லா. மருத்துவத்தில் பயன்படும் மிகச்சிறிய எம்.ஆர்.ஐ ஸ்கான் இயந்திரங்களின் காந்தப்புலன் அளவு 0.2 மற்றும் 0.3 Tesla, அதிகபடியான அளவு 3 Tesla. அதாவது இயற்கை காந்தப்புலனைவிட சுமார் பத்தாயிரம் மடங்கிலிருந்து ஒரு லட்சம் மடங்கு அதிகம் சக்திவாய்ந்த காந்தங்களை உபயோகிக்கிறோம்.

இந்த பெரிய காந்தம் ஒரு உளுந்துவடை போன்று நடுவில் ஓட்டை உள்ள உருவம் கொண்ட வட்டமான இயந்திரத்தினுள் பொருந்தியிருக்கும் (அதன் பெயர் gantry). இந்த வட்ட இயந்திரத்தினுள் ஒருவரை படுக்க வைத்து இயந்திரத்தை இயக்கினால், அவருடைய உடல் அந்த இயந்திரத்திலிருக்கும் பெரிய காந்தத்தின் காந்தபுலணிற்கு (magnetic field) உட்படும். அப்படி சக்திவாய்ந்த காந்தபுலணிற்கு உட்பட்டிருக்கும் உடலுக்கு வெளியில் இருந்து வானொலி அதிர்வெண்கள் (radio frequency waves / RF waves) மூலம் அதிர்வு ஏற்படுத்தப்படும் (excitation). இந்த அதிர்விலிருந்து மெதுவாக உடல் மறுபடியும் தளர்ந்து இயந்திரத்தின் காந்தத்தன்மையை அடையும் (relaxation to original magnetic field). அதிர்வினால் ஏற்பட்ட கூடுதல் சக்தி (energy) இந்தத் தளர்ச்சி ஏற்படும் பொழுது உடலிலிருந்து வானொலி அதிர்வெண்கள் மூலம் வெளிபடும். வெளிபடும் வானொலி அதிர்வேன்களை (emitted RF waves) வைத்து உடலை படம் பிடிப்பதுதான் எம்.ஆர்.ஐயின் ரகசியம். [அடுத்து வருவது  நண்பர் கொத்தனார் பின்னூட்டத்தில் கேள்வியாகக் கேட்டதிலிருந்து சேர்த்துக்கொண்டேன்] பலவித அடர்த்திகளில் இருக்கும் பாகங்களில் இருந்து வெளிவரும் வானொலி அதிர்வலைகள் வித்தியாசமாக இருப்பதை வைத்து இந்தப் படங்கள் கிடைக்கின்றன.

எம்.ஆர்.ஐ ஸ்கான் முறையில் எக்ஸ்-ரே (X-ray), சி.டி. ஸ்கான் (CT scan) போன்ற ஸ்கான் முறைகளில் உபயோகப்படுத்தப்படும் உடலுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய ஊடுகதிர்கள் (ionizing radiation, ie, X-rays) கிடையாது. எம்.ஆர்.ஐ. ஸ்கானில் இருக்கும் காந்தத்தன்மையால் நம் உடலுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது. காந்தத்திலிருந்து வெளியே எடுத்ததும், ஸ்கான் செய்யப்பட்டவரின் உடல் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

மருத்துவத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கான் எப்படி உபயோகிக்கப்படுகிறது?

இன்றைய நிலையில், எம்.ஆர்.ஐ ஸ்கான் உச்சி முதல் பாதம் வரை எல்லா மனித உறுப்புகளையும் துல்லியமாகப் படம் பிடிக்கும் வல்லமையுடன் இருக்கிறது. பல மருத்துவத்துறை நிபுணர்களால் எம்.ஆர்.ஐ ஸ்கான் இல்லாமல் சரியான சிகிச்சை கொடுக்கவே முடியாது என்கிற நிலைதான் உள்ளது.

ஆங்கிலத்தில் soft tissues என்று சொல்லப்படும் உடலின் மென் உறுப்புகளையும் (உதாரணமாக மூளை, முதுகுத்தண்டு, கண்கள், இருதயம், ஈரல், கணையம்) மற்றும் மூட்டுகளையும் (joints),  தசைகளையும் (muscles) துல்லியமாகப் படம் பிடிக்க எம்.ஆர்.ஐ. தான் சிறந்த ஸ்கான் முறை.

கர்பிணிப் பெண்களுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கான் (Ultrasound scan) செய்து குழந்தையின் வளர்ச்சியையும் உறுப்புக்களையும் படம் பிடிப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கருவிலிருக்கும் குழந்தைக்கு உறுப்புகளில் கோளாறு இருப்பின் அதை அல்ட்ராசவுண்ட் ஸ்கானைவிடத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்ட எம்.ஆர்.ஐ ஸ்கான் உதவும்.

அண்மையில் சில வருடங்களாகப் பிரபலமாயிருப்பது மூளையின் செயல்பாட்டை ஸ்கான் செய்யக் கூடிய ஃபன்க்ஷனல் எம்.ஆர்.ஐ ஸ்கான் (functional MRI, also known as fMRI).

எம்.ஆர்.ஐ. ஸ்கான் பெரியதா / நல்லதா அல்லது சி.டி. ஸ்கான் (CT scan) பெரியதா / நல்லதா?

இது சாதாரண மக்களுக்கு மட்டுமில்லை, மருத்துவத்துறையிலே உள்ள பலருக்கும் உள்ள சந்தேகம். பரவலாக சி.டி. ஸ்காணைவிட எம்.ஆர்.ஐ ஸ்கானுக்கு விலை அதிகம், அதானாலையே இந்தக் கேள்வி மக்களின் மத்தியில் பரவி விட்டதோ என்று எனக்கொரு சந்தேகம்.

முதல் கேள்விக்கான பதிலில் நான் குறிப்பிட்டிருந்தேன், இவ்விரண்டு ஸ்கான்களும் வெவ்வேறு முறைகளை உபயோகித்து உடலைப் படம் பிடிக்கின்றன என்று.

ஒவ்வொரு ஸ்கான் முறைக்கும் சில பிரத்தியேகமான உபயோகங்கள் உள்ளன. உதாரணமாக நுரையீரலை படம் பிடிக்க சி.டி.ஸ்கான் தான் உசிதம், மூட்டுகளினுள்ளே உள்ள மென் தசைகளை (ligaments, tendons) படம் பிடிக்க எம்.ஆர்.ஐ தான் உசிதம். சில/பல இடங்களில் இரண்டில் எதை உபயோகித்தாலும் தப்பில்லை (உதாரணம்: மூளை). பல நேரங்களில் எந்த ஸ்கான் முறையை உபயோகிக்கலாம் என்பதை அந்த மருத்துவமனையிலோ அந்த ஊரிலோ எது வசதியாக உள்ளது என்பதைப் பொறுத்தே மருத்துவர்கள் முடிவு செய்கிறார்கள்.

பதிவின் நீளம் அதிகம் ஆகிவிட்டது. இதை முதல் பாகமாக இட்டுவிட்டு மீதியை நாளை எழுதுகிறேன். தமிழில் எழுதிப் பழக்கமில்லாததால் இதில் எழுத்து, இலக்கணப் பிழைகள் அதிகம் இருக்கும். மிகவும் மோசமாக உள்ளவைகளைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன். மேலும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். விடை அளிக்க முயலுகிறேன்.
பாகம் 2 இங்கே உள்ளது.

ஜனவரி 17, 2010

தாய் நாடு திரும்பும் மருத்துவ நண்பர்கள் – பாகம் 1

குறிப்பு: மருத்துவத் துறையில் என் அனுபவங்களும் துறையை பற்றி எனக்கு தெரிந்த, தோன்றும் சில விஷயங்களை சிறு பதிவுகளாக இடும் முயற்சியில் இது முதல் பதிவு. இதில் வருபவை என்னுடைய சொந்த அபிப்ராயங்களே. பலருக்கு மாற்று கருத்துகள் அல்லது சந்தேகங்கள் இருக்கலாம். பின்னூட்டத்தில் கேள்வி கேட்டால் விடை கொடுக்க முயற்ச்சிக்கிறேன்.

நான் முன்பு வேலை செய்த மருத்துவமனையின் பிரபலமான தலைவர் அடிக்கடி சொல்லுவார் NRI என்றால் Non-Returning Indians என்று. அதாவது நாடு திரும்பாத இந்தியர்கள். அதில் உண்மை இருக்கிறதா இல்லையா, எதனால் அப்படி என்ற சர்ச்சையில் சிக்க நான் விரும்பவில்லை. இந்த பதிவு அந்தக் கருத்தை தழுவிய வேறு விஷயத்தைப் பற்றி.

கடந்த சில வருடங்களாக என்னுடைய மருத்துவ நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் சரகத்தில், இங்கிலாந்திலிருந்து நாடு திரும்புவோர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இரண்டு வருடங்களில் சுமார் பத்து பேர் நாடு திரும்பியிருக்கிறார்கள்.

இங்கிலாந்து சென்று மேல் படிப்பு படித்து சொந்த ஊருக்கு திரும்பி வந்து மருத்துவத் தொழில் செய்வது பல வருடங்களாக நடப்பதுதானே, இதில் என்ன புதுசுன்னு படிப்பவர்கள் நினைக்கலாம். இதில் ஓரளவு உண்மை இருக்கு. ஆனால் இப்ப திரும்பி வந்த சில நண்பர்களுடன் பேசியதில் சில புது காரணங்களை தெரிந்து கொண்டேன். அந்த காரணங்களை பார்க்கும் முன் மருத்துவர்கள் வெளி நாடுகள் செல்வது பற்றி ஒரு சின்ன அலசல்.

நான் மேலே சொன்னது போல், தமிழகத்திலிருந்து வெளி நாடுகளுக்கு மருத்துவர்கள் செல்வதொன்றும் புதுசு இல்லை. இந்தியா சுதந்திர நாடு ஆவதற்கு முன்பிருந்தே இங்கிருந்து மேலை நாடுகளுக்கு மருத்துவர்கள் மேல் படிப்பு மற்றும் வேலை தேடி சென்றிருக்கிறார்கள். பல வருஷங்களா வெளி நாடு சென்ற மருத்துவர்களை தேதிவரை (dateline) படி 1970-க்கு முன் சென்றவர்கள், எழுபதுக்களுக்கு பின் சென்றவர்கள் என்று இரண்டாக பிரிக்கலாம். எழுபதுக்களுக்கு முன் சென்றவர்கள் பெரும்பாலும் மேற்கே இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா சென்றார்கள். சிலர் கிழக்கே ஆஸ்திரேலியா, ந்யூசிலாந்து மற்றும் சிங்கபூருக்கு சென்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வெளி நாடு சென்றது அங்கேயே குடியேறும் நோக்கத்தில்தான். அப்படி குடியேறியவர்களில் பெரும்பான்மையினர் நல்ல வாழ்க்கை முறை ஏற்படுத்திக்கொண்டு செழிப்பாக இருக்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

எழுபதுக்களுக்கு பின் அதுவும் குறிப்பாக எண்பதுகளுக்கு மேல் இங்கிருந்து சென்ற மருத்துவர்களுக்கு கனடா, ஆஸ்திரேலியா, ந்யூசிலாந்து போன்ற நாடுகளில் குடியுரிமை பெறுவது பெரும் கஷ்டமாகியது. ஓரளவு எளிதில் செல்லக் கூடிய நாடுகள் அமேரிக்கா, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து. இந்த நாடுகளுக்கு செல்லவும் கெடுபிடிகள் ஜாஸ்தியாயின. இங்கிருந்து போனதும் வேலை கிடைக்காது. அந்த நாட்டில் மருத்துவ வேலையில் சேர்வதற்கு முன் அனுமதி தேர்வில் (Licensing exams: USMLE for USA, PLAB for UK & Ireland) தேர்ச்சி பெற வேண்டும்.

அமெரிக்காவை பொறுத்த வரையில், USMLE அனுமதி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால் ஏதாவது மருத்துவ பிரிவில் (specialty) தேர்ச்சிபெற ரெசிடென்சி ப்ரோக்ராம் (Residency Program – நம்ம ஊர் முதுநிலை மருத்துவ படிப்பு – postgraduate specialty – போல்) ஒன்றில் சேர்ந்துவிடலாம். சில ஆண்டுகள் கழித்து முதுகலை மருத்துவ துறைகளுக்கான அமேரிக்க தேர்வாணையத்தில் (American Board of Medical Specialties) தேர்ச்சி பெற்றுவிட்டால் நன்றாக சம்பாதிக்க கூடிய வேலை வாய்ப்பு கண்டிப்பாக உண்டு  என்கிற நிலைமை இருந்து வந்தது. ஆனால் எண்பதுகளில் தொடங்கிய விசா கெடுபிடிகளால் வெளிநாட்டு மருத்துவர்கள், குறிப்பாக இந்திய மருத்துவர்கள் அமெரிக்காவினுள் நுழைவது பெருமளவில் குறைந்தது. இன்று வரை எப்படியும் அமெரிக்காவில் மருத்துவராக வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்று சிலர் முட்டி மோதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தேர்ச்சி பெற்று வேலையில் சேர்ந்தாலும் நிரந்தர குடியுரிமை கிடைப்பது குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது.

அமேரிக்கா செல்லும் வாய்ப்புகள் குறைந்ததால் இங்கிலாந்து செல்ல முயர்சிப்போரின் எண்ணிக்கை அதிகமாகியது. உள்ளே நுழைய முயர்ச்சிப்பவர்கள் அதிகாமனதாலோ என்னவோ அவர்களை உள்ளே அனுமதிக்க கெடுபிடிகள் அதிகரித்தன.

எண்பதுகளில் தொடங்கி இங்கிலாந்து சென்ற மருத்துவர்களை இரண்டு வகைப் படுத்தலாம். ஒரு வகை, இங்கே எம்.பி.பி.எஸ் இளநிலை பட்டம் படித்து முடித்தவுடன் அங்கே சென்று PLAB தேர்வில் தேர்ச்சி பெற்று வேலையில் சேருவோர். இவர்களில் பெரும்பாலானோர் இங்கிலாந்திலேயே நிரந்தரமாக தங்கிவிடலாம் என்று சென்றவர்கள். வேலையில் சேர்ந்த சில வருடங்களுக்குள் ஏதாவது மருத்துவ சிறப்பு பிரிவில் (specialty) தேர்ச்சி பெற்று விடுவார்கள். அங்கே சிறப்பு துறை தேர்வுகளை கடந்தால் ராயல் காலேஜ் உறுப்பினர் அல்லது உயர் அங்கத்தினர் (Member or Fellow of the Royal College of Physicians, Surgeons, ie, MRCP, FRCP, MRCS, FRCS, etc,.) என்று பட்டம் அளிப்பார்கள். இப்படி ஏதாவது சிறப்பு பிரிவில் தேர்ச்சி பெற்றுவிட்டால் நல்ல சம்பளத்துடன் மருத்துவ ஆலோசகர் (கன்சல்டன்ட்/consultant) பதவி கிடைக்கும்.

இரண்டாவது வகை, இங்கேயே ஏதாவது சிறப்பு மருத்துவ பிரிவில் முதுநிலை பட்டம் (postgraduate diploma or masters degree. Eg. DGO, DCH, DOrtho, MD, MS, etc,.) பெற்றபின் சில வருடங்கள் இங்கிலாந்தில் மேலும் தேர்ச்சி பெறுவதற்காக செல்பவர்கள். இவர்கள் கண்டிப்பாக திரும்பி வரும் எண்ணத்தோடு செல்பவர்கள். நாடு திரும்பும் போது கூடுதலாக குறைந்தபட்சம் ஒரு பட்டம், சேமிப்பு கணக்கில் கணிசமான தொகையோடு வருவார்கள். இவர்களை பற்றி நான் வேறு எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

நான் ஆரம்பத்தில் நாடு திரும்பும் நண்பர்கள் என்று குறிப்பிட்டது முதல் வகையில் இங்கிலாந்து சென்றவர்களை. அனைவருமே 1990-க்கு பின் சென்றவர்கள். திரும்பி வந்தவர்களில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் இங்கிருந்து போகும் போது அங்கேயே நிரந்தரமாக தங்கிடலாம்னுதானே போனீங்க, ஏன் இப்போ திரும்பி வந்துட்டீங்கன்னு நான் கேட்ட கேள்விக்கு அவர்கள் சொன்ன பதில்களில் இருக்கும் பொதுவான கருத்துக்களை அடுத்த பதிவில் பார்ப்போம்…

« முன்னைய பக்கம்