இந்த மருத்துவக் கட்டுரைத் தொடரின்
- முதல் பாகம் / முன்னுரை – தயக்கம் என்ன.
- இரண்டாம் பாகம் – பார்க்கும் இடம் எல்லாம் புற்று.
- மூன்றாம் பாகம் – புற்று மிகும் இடங்கள்.
- நான்காம் பாகம் – புற்று முன்பு பார்க்க…
இது அதன் தொடர்ச்சி.
புற்றுநோய்களுக்கு ஸ்கேன் செய்வது பற்றி பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன். இதை பல கண்ணோட்டங்களில் பார்க்கலாம், கொஞ்சம் ரஷோமொன் எபெக்ட் வரும், அதை விளக்க முடிகிறதா என்று பார்க்கிறேன் (அது என்ன ரஷோமொன் எபெக்டுன்னு தெரியாதவங்க கண்டுக்காம விட்டுடுங்க நானும் தமிழ் இணையச் சூழலில் உலவும் பல உலக சினிமா எக்ஸ்பெர்ட்ஸ் மாதிரி விக்கிப்பீடியாவில்தான் படித்தேன்).
இந்தக் கட்டுரைத் தொடரின் போன பாகத்தில் “இது நேரடி புற்றுநோயாக (primary cancer) இருக்கலாம் அல்லது வேறு உறுப்பில் உருவான புற்றிலிருந்து பரவி இங்கு வந்திருக்கலாம் (secondary / metastatic cancer)” என்று ஒரு இடத்தில் எழுதி இருந்தேன். வேறு உறுப்புகளுக்குப் பரவுவது ஒரு புற்றுநோயின் பரிணாம வளர்ச்சியின் அங்கம். பொதுவாக ஒரு புற்றுநோய் எப்படி உருவாகி வளர்கிறது என்று தெரிந்துகொள்வோம். இது எல்லாப் புற்றுநோய்களுக்கும் அப்படியே பொருந்தும் என்று சொல்ல முடியாது. சில வேறுபாடுகள் இருக்கும். ஏதாவது ஒரு உறுப்பிலோ தசையிலோ ஒரு உயிரணு கட்டுக்கடங்காமல் பகுத்து, பல்கிப் பெருகி பல்லாயிரம் லச்சம் என்று எண்ணிக்கை கூடி உருவமில்லாத கட்டியாக சேர்ந்து புற்றுநோயாகிறது. இந்தப் புற்றுநோய்க் கட்டிக்கு அந்த உறுப்பிற்கு ஏற்கனவே இருக்கும் இரத்தக் குழாய்கள் புதிதாக கிளைக் குழாய்களை அமைத்து ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்லும், அங்குள்ள கழிவுகளை அகற்றும். புற்றுநோயின் தன்மையே கட்டுக்கடங்காமல் வளர்ந்துகொண்டே இருப்பதுதான். கட்டி வளரும்போது அது உருவான உறுப்பிலிருந்து வெளிப்பட்டு அருகில் இருக்கும் உறுப்புகளையோ, தசைகளயோ ஊடுருவும் வாய்ப்பு இருக்கிறது. கட்டி உருவான உறுப்புக்கு அருகில் இதயம், மூச்சுக் குழாய், முதுகுத்தண்டு போன்ற முக்கியமான உறுப்புகள் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். பல சமயங்களில் புற்றுக்கட்டிகள் பக்கத்தில் இருக்கும் எதாவது முக்கிய உறுப்பை ஊடுருவி பிரச்சினை ஆவதால்தான் நோய்வாய்ப்பட்டு மருத்துவரை நாடுவார்கள். எதனால் பிரச்சினை என்று தேடும்போது புற்றுநோய் கண்டுபிடிக்கப்படும்.
இரத்தக் குழாய்க் கிளைகள் புற்றுநோய்க்கட்டியை ஊடுருவும் என்று பார்த்தோம். அப்படி ஊடுருவும்போது அந்தப் புற்றுக்கட்டியில் இருக்கும் பாதிக்கப்பட்ட உயிரணுக்கள் இரத்தத்தில் கலந்து உடலின் வேறு பாகங்களுக்கு பரவ வாய்ப்பு ஏற்படுகிறது. இப்படிப் பரவும் போது அருகில் இருக்கும் நெரிக்கட்டிகளுக்கு முதலில் பரவும் அதன்பின் தூரத்தில் இருக்கும் மற்ற உறுப்புகளுக்கு பரவும். தூரத்தில் இருக்கும் உறுப்புகளில் இரத்த ஓட்டம் அதிகம் உள்ள நுரையீரல், கல்லீரல், மூளை மற்றும் எலும்புகளில்தான் பரவிப்போய் முளைக்கும் செகண்டரி அல்லது மெடாஸ்டாடிக் புற்றுக்கட்டிகளைப் அதிகம் பார்க்கலாம்.
வெவ்வேறு உறுப்புகளில் உருவாகும் புற்றுநோய்களுக்கும் தசைக்குழுமங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கும் இது மாறுபடும், ஆனால் சற்றேறக்குறைய இப்படித்தான் புற்றுநோய்களின் “ஸ்டேஜ் (stage)” என்று மருத்துவத்துறையில் சொல்வோம். ரொம்ப பொதுவாக இந்த ஸ்டேஜ்கள் என்ன என்று சிறு விளக்கம் சொல்கிறேன். கண்டிப்பாக ஒவ்வொரு கேன்சருக்கும், ஒவ்வொரு நோயாளிக்கும் இது மாறும். சிறுநீரகப் புற்றுநோயை எடுத்துக்காட்டாக கொடுக்கிறேன்.
- முதல் ஸ்டேஜ் – சின்னக் கட்டி, தோன்றிய உறுப்பின் உள்ளேயே இருக்கும். இருக்கும் உறுப்பைப் பொறுத்து அறுவை சிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சை மூலமாக முழுவதுமாக அகற்ற வாய்ப்புகள் அதிகம். [எ.கா. கட்டி சிறுநீரகத்தினுள்தான் இருக்கிறது]
- இரண்டாம் ஸ்டேஜ் – சற்று பெரிய கட்டி. இதுவும் தோன்றிய உறுப்பினுள்தான் இருக்கும் ஆனால் அந்த உறுப்பின் வெளி எல்லையை தாண்டியிருக்கலாம். சில இடங்களில் எல்லையைத் தாண்டவில்லை என்றாலும் கட்டியின் அளவு பெரிதாகிவிட்டதாலும் அந்த உறுப்பு இருக்கும் இடத்தை வைத்தும் இராண்டாம் நிலைக்குத் தள்ளப்படும். அறுவை சிகிச்சையில் கட்டியை முழுமையாக அகற்றும் வாய்ப்பு குறையும். [எ.கா. கட்டி சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள கொழுப்புத்தசைகளுக்கு பரவியிருக்கிறது, வேறு எங்கும் பரவவில்லை]
- மூன்றாம் ஸ்டேஜ் – இந்த நிலையில் கட்டி பெரிதாகத்தான் இருக்கும்*. தோன்றிய உறுப்பின் எல்லையைத்தாண்டி பரவியிருக்கும். அருகில் உள்ள உறுப்புகள், தசைகளை ஊடுருவியிருக்கும். அருகில் உள்ள நெரிக்கட்டிகளுக்கு பரவியிருக்கும். * கட்டி சிறிதாக இருந்தாலும் பக்கத்தில் இருக்கும் உறுப்புகளை ஊடுருவியிருந்தாலோ பக்கத்திலிருக்கும் நெரிக்கட்டிகளுக்கு பரவியிருந்தாலோ அது மூன்றாம் நிலைக்குத் தள்ளப்படும். இந்த நிலையில் புற்றுநோயை முழுவதும் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. [எ.கா. கட்டி சிறுநீரகத்திற்கு அருகில் உள்ள தசைகளை ஊடுருவியிருக்கிறது, அல்லது இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டிருக்கிறது, அல்லது அருகில் உள்ள நெரிக்கட்டிகளுக்கு பரவியிருக்கிறது]
- நான்காம் ஸ்டேஜ் – கட்டி என்ன அளவாக இருந்தாலும், அது எந்த உறுப்பில் தோன்றியிருந்தாலும், அருகில் ஊடுருவியிருந்தாலும், (நுரையீரல், கல்லீரல், மூளை, எலும்புகள் போன்ற) தூரத்தில் இருக்கும் உறுப்புகளுக்கு இரத்தின் மூலமாக பரவியிருந்தால் அது நான்காம் நிலைக்குத் தள்ளப்படும். இவர்களுக்கு இனி நோய்த் தணிப்பு பேணல்தான் வழி (palliative care).
புற்றுநோய் எந்த ஸ்டேஜ் / நிலையில் இருக்கிறது என்பதை அறிந்துதான் அதற்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்று சொல்ல முடியும். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய்களைக் கண்டுபிடிப்பதும் நிலைப்படுத்துவதும் பெரும்பாலும் ரேடியாலஜி / ஸ்கேனிங் துறையினரின் வேலையாகத்தான் இருக்கிறது.
எந்த வகை புற்றுநோய்க்கு எந்த எக்ஸ்ரே அல்லது ஸ்கேன் வகை உகந்தது என்று நான் பட்டியலிட்டு எழுதப்போவது இல்லை. அப்படிப்பட்ட தகவல்கள் இணையத்தில் (பெரும்பாலும் ஆங்கிலத்தில்) பரவலாக உள்ளன, நீங்களே தேடிக்கொள்ளலாம் அல்லது மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி புற்றுநோய் மற்றும் ஸ்கேன் துறை பற்றி பொதுவாக எழுதுகிறேன்.
மேலே படிப்பவர்கள் ஒரு விஷயத்தை முதல் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாகத்தான் புற்றுநோய் சிகிச்சைத்துறையும் ரேடியாலஜி / ஸ்கேனிங் துறையும் இவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நம்முடைய வளர்ச்சி அபாரமானதுதான், ஆனால் இது பத்தாது என்பதுதான் உண்மை. புற்றுநோய்களைக் கண்டுபிடிக்கும் திறமை வளர்ந்திருக்கும் அளவிற்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் கட்டமைக்கப் படவில்லை. புற்றுநோய் சிகிச்சையைப் பற்றி எழுதும்போது இதைப் பற்றி மேலும் விரிவாக எழுதுகிறேன், ஆனால் இப்போழுது இரண்டு விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன். புற்றுநோய்களைப் பொறுத்தவரை நோயைக் கண்டுபிடித்தல், நிலைப்படுத்துதல், சிகிச்சை திட்டமிடுதல் (diagnosis, staging, treatement planning and implementation) எல்லாமே ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். அங்கொன்று இங்கொன்று என்று பிய்த்துப் பிய்த்து இருந்தால் நோயாளிக்கு(ம் குடும்பத்தாருக்கும்) சரிப்பட்டு வராது. எந்த வகைப் புற்றுநோயை உதாரணமாக எடுத்துக்கொண்டாலும் நாம் பெரும்பாலும் மூன்றாம் நிலை அல்லது நான்காம் நிலை நோயாளிகளுக்குத்தான் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறோம். மிகச்சில ஒன்றாம் நிலை இராண்டாம் நிலை நோயாளிகளைத்தான் பார்க்கிறோம். அதாவது புற்றுநோயை சிகிச்சை மூலமாக குணப்படுத்தவோ முழுமையாக அகற்றவோ மிக அறிதாகத்தான் வாய்ப்பு கிடைக்கிறது.
இதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் நண்பர் புரூணோ ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதியிருந்தார்:
In States like TN Once infectious diseases were controlled, diabetes and hypertension have become leading health burden
So, at present Chennai is the Diabetic capital of India
After we control this too, cancer will become the leading cause of death and when some other state is diabetic capital we will be cancer capital — States like Chattisgarh still are fighting with Malaria, TB and Cholera
புற்றுநோய் சிகிச்சையின் நிலையும் போகப் போக தமிழகத்தில் மாறும்.
எந்தப் புற்றுநோய்க்கு எந்த எக்ஸ்ரே / ஸ்கேன் செய்யலாம் என்று எழுதுவதைவிட பல வகையான ஸ்கேன் கருவிகளால் என்ன பயன் என்று எழுதுகிறேன்.
முத்து என்ற நபருக்கு உடலில் எதோ ஒரு பாகத்தில் கட்டி இருக்கிறது என்று மருத்துவர் கண்டுபிடித்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். முத்து இரண்டு மூன்று வாரகாலமாக இடதுபக்கமாக வயிற்றில் வலிக்கிறது என்று மருத்துவரிடம் சென்றிருந்தார். மருத்துவர் அவரிடம் கேள்விகளைக் கேட்கும்போது, முத்துவுக்கு 55 வயதாகிறது என்றும் வேறு எந்த நோயும் இல்லை என்றும் தெரிந்து கொண்டார். ஆனால் கொஞ்சம் உடல் இளைத்திருப்பதாகவும், இப்பொழுதெல்லாம் பசி அவ்வளவாக இருப்பதில்லை என்றும் முத்து சொல்கிறார். முத்துவின் வயிற்றுப்பகுதியை அழுத்திப் பார்க்கும்போது இடது பக்கம் ஒரு கையகலக் கட்டிபோல் மருத்துவர் கையில் பட்டிருக்கிறது. அப்போது மருத்துவருக்கு இது மண்ணீரல் வீக்கமா, சிறுநீரகக் கட்டியா, குடலில் கட்டியா அல்லது வேறு ஏதாவது கட்டியா என்ற சந்தேகம். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து வரச்சொல்லியிருக்கிறார். அந்த ஸ்கேனில் குடல் கட்டியாக இருக்கும் என்ற சந்தேகம் எழுப்பப் பட்டிருந்தது. மண்ணீரலிலும் சிறுநீரகங்களிலும் பிரச்சினை ஒன்றும் இல்லை. இந்த நிலையில் சிறந்த அடுத்த கட்ட நடவடிக்கை, முத்துவை முழு உடல் பெட்-சி.டி. ஸ்கேன் (whole body PET-CT scan) எடுக்கச் சொல்ல வேண்டும். அல்ட்ராசவுண்ட் ஒரு அடிப்படை ஸ்கேன். அதில் அதிக விவரங்கள் தெரியாது. அதுவும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு பெரிய அளவில் உதவாது. குடல் பிரச்சினைகளுக்கு CT ஸ்கேன்தான் உகந்தது. முத்துவுக்கு குடலில் கட்டி என்றால் CT ஸ்கேன் செய்யலாமே. அது என்ன முழு உடல் PET-CT? Fusion music கேள்விப்பட்டிருப்பீர்களே? அந்த மாதிரி முழு உடல் PET-CT என்பது ரேடியாலஜி மற்றும் நியூக்ளியர் மெடிசின் (அணுவியல் மருத்துவம்) துறைகளின் கூட்டணியில் பிறந்தது. அதன் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் விடுவோம். அதனால் என்ன பயன் என்று பார்ப்போம். முழு உடல் PET-CT செய்தால் diagnosis + staging (கண்டுபிடித்தல் + நிலைப்படுத்துதல்) இரண்டையும் ஒரே ஸ்கேனில் முடித்துவிட்டு சிகிச்சையை தொடங்கிவிடலாம். ஆனால் இரண்டு தொல்லைகள் உள்ளன. இந்த ஸ்கேன் மிகக்குறைவான இடங்களில்தான் செய்யப்படுகிறது. மிகவும் விலையுயைர்ந்தது. எனக்குத் தெரிந்து குறைந்தப் பட்ச விலையே பதினைந்தாயிரம் ரூபாய். தமிழக அரசு மருத்துவமனைகளில் இந்த வசதி இன்னும் வரவில்லை. விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
முழு உடல் PET-CT ஸ்கேன் செய்யும் வசதி இல்லை என்றால் என்ன செய்ய? நெஞ்சு, வயிற்றுப்பகுதிகளில் உள்ள உறுப்புக்களில் கட்டி உள்ளது என்றால் இந்த இரண்டு பாகங்களையும் ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்யக்கூடிய மல்டிஸ்லைஸ் சிடி ஸ்கேன் (multi-slice CT scan) செய்யலாம். குறைந்தபட்சம் 4 அல்லது 6 ஸ்லைஸ் CT ஸ்கேனாக இருப்பது நல்லது. மூளை, முதுகுத்தண்டு, முதுகெலும்பு, இடுப்புப் பகுதி கட்டிகளுக்கும் தலை, கழுத்துப் பகுதி கட்டிகளுக்கும் MRI ஸ்கேன் செய்வது நல்லது. ஸ்கேன் கருவி 1.5 அல்லது 3 டெஸ்லா காந்த சக்தி (1.5 or 3 Tesla magnetic field strength) உடையதாக இருப்பது நல்லது, கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கை கால் எலும்புகளில், தசைகளில் கட்டி இருந்தால் எக்ஸ்ரே மற்றும் MRI scan எடுக்க வேண்டும். தமிழகத்தில் பல ஊர்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் ஸ்கேன் மையங்களிலும் (4-slice, 6-slice, 16-slice, 64-slice, 128-slice) mutlislice CT scan மற்றும் (1.5 Tesla, 3 Tesla) MRI scan உள்ளன. பல சமயங்களில் கல்லீரல், கணையம் (pancreas), கருப்பை, சினைப்பை போன்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படும்போது ultrasound, CT, MRI மூன்று ஸ்கேன்களும் செய்ய வேண்டி வரலாம். சிகிச்சைத் திட்டதிற்குத் தேவையான சில விவரங்கள் சில ஸ்கேன் முறைகளில் மட்டும்தான் கிடைக்கும். அதனால் அவைகளைச் செய்தே அகவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
கட்டி இருக்கிறது என்று தெரிந்து கொண்டபின் அது எந்த வகையான கட்டி என்று அறிய அதிலிருந்து சதை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் (FNAC / FNAB / biopsy tests). மூச்சுக் குழாய், இறைக் குழாய்களில் கட்டி இருந்தால் மருத்துவர் எண்டாஸ்கோபி செய்யும்போது பரிசோதனைக்கு சதை எடுக்கலாம். நெஞ்சு, வயிற்றுப்பகுதிகளில் உள்ள உறுப்புக்களில் கட்டி உள்ளது என்றால் ultasound அல்லது CT ஸ்கேனில் பார்த்துக்கொண்டே ஊசியை உள்ளே செலுத்து கட்டியிலிருந்து சதையை பரிசோதனைக்கு எடுக்கலாம் (imaging guided biopsy). சில சமயங்களில் வேறு எந்த வகையிலும் முடியாதபோது பரிசோதனைக்கு சதை எடுப்பதற்காகவே அறுவைசிகிச்சை செய்யவேண்டி வரலாம்.
புற்றுநோயைக் கண்டறிவது என்பது ஒரு ஆரம்பம்தான். நோயாளிக்கும் அவர் குடும்பத்தார்க்கும் பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் தொடர்ந்து நீண்டகாலம் பாதிக்கக்கூடிய பயணத்தின் தொடக்கம் இது.
அடுத்ததாக புற்றுநோய்களின் சிக்கிச்சையைப் பற்றி சில நாள் இடைவேளை கழித்து பார்க்கலாம்… பொங்கல் விடுமுறைப் பயணம்.