முன்கதை: உலக நாயகன் – 1, 2, 3
…
இத்தனை நேரம் மீனாட்ச்சியின் தாய் சொல்லிக்கொண்டிருப்பதை கதை கேட்பது போல் “உம்” கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்த ரேவதி திடுக்கிட்டு, “என்னது?! ஜன்னி வந்துச்சா?!” என்று கேட்டாள்.
“ஆமாம்மா ரெண்டு நிமிஷம் கை காலெல்லாம் இழுத்துக்கிட்டு, கருவிழி மேலே போய் மயக்கமாயிட்டா. கீழே உங்க டாக்டரும் நர்ஸுகளும் கை நரம்புல ஊசி குத்தி குளுகோஸ் போட்டாங்க. ஒரு நர்ஸ் பார்த்துட்டு கொழந்தை வெளிய வர்றமாதிரி இருக்குன்னு சொல்லிச்சு, அப்புறம் என்னை வெளிய அனுப்பீட்டாங்க.”
“ஒன்னு சொல்ல மறந்த்துட்டேனேம்மா! கார்ல வரும்போதே பனிக்குடம் ஒடஞ்சு போச்சுன்னு எனக்கு சந்தேகம். ஆனா தண்ணி ரொம்பக் கம்மியாத்தான் வந்த மாதிரி இருந்திச்சு.”
“ஓ! அப்படியா,” என்று கேட்ட ரேவதி தொடர்ந்து, “கர்பமா இருக்கும்போது வெறு ஏதாவது பிரச்சினை இருந்ததாம்மா?” என்றாள்.
“அதை ஏம்மா கேக்குற, ஆரம்பத்திலிருந்தே பிரச்சினை தான். இது அவ கர்ப்பமாகிற நாலாவது முறை. முதல் மூனு தடவை மூனு, நாலு மாசத்துலயே அபார்ஷன் ஆயிருச்சு. இந்தத் தடவை அஞ்சாவது மாசத்திலிருந்து பிரஷர் அதிகமாகி மருந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தா.”
“நாலாவது கர்ப்பமா?! மீனாட்ச்சிக்கு இப்ப என்னம்மா வயசு?” என்று குறுக்கிட்டுக் கேட்டாள் ரேவதி.
“இருபத்திநாலு நடக்குதும்மா”
“இருபத்திநாலுதானா?! கல்யாணம் ஆகி எத்தனை வருஷமாச்சு?”
“அது ஆச்சும்மா ஆறு வருஷம்.”
“பதினெட்டு வயசிலேயே கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்களா?”
“ஆமாம்மா. எப்படி இருந்தாலும் அத்தை மகனைத்தானே கட்டிக்க போறான்னு ப்ளஸ் டூ படிச்சு முடிச்சதும் கல்யாணம் செஞ்சு வச்சுட்டோம்.”
“சரி. இந்த முறை கர்ப்பமான ஆரம்பத்திலிருந்தே டாக்டரை பார்த்தீங்களா?”
“கர்ப்பமானதே கலைவாணி அம்மாகிட்ட டிரீட்மெண்டு எடுத்துதானே!”
“Dr. கலைவாணி மகப்பேறு மருத்துவரா? அவங்களேதான் முந்தைய மூணு தடவையும் பார்த்தாங்களா?”
“அமாம்மா. அதே டாக்டரம்மாதான். எங்க ஊர்ல நல்ல ராசியான டாக்டர்ன்னு அவிங்களுக்கு நல்ல பேரும்மா. மூணு அபார்ஷன் ஆனதுக்கப்புறம் இந்தத் தடவை கர்ப்பமாகி இவ்வளவு தூரம் வந்ததே அவிங்க கை ராசின்னுதான் சொல்லணும். மீனாட்சிக்கு பிரஷர் வந்ததுமே பத்து மாசத்துக்கு முன்னையே டெலிவரி ஆகிடறது கொழந்தைக்கும் அம்மாவுக்கும் நல்லதுன்னு டாக்டரம்மா சொன்னாங்க. ஏழு மாசத்துல செக்கப்புக்கு போனப்ப கொழந்தையச் சுத்தி நீர் கம்மியா இருக்குன்னு சொல்லி ஸ்கான் பன்னி பார்க்கச் சொன்னாங்க. நீர் கம்மியாத்தான் இருந்தது. கொழந்தை எடையும் கம்மியா இருக்குன்னு சொன்னாங்க. பிரஷர் அதிகமா இருந்து, பொண்ணு ஒடம்பெல்லாம் நீர் கோர்த்து ஊதிப்போயிருந்துச்சு, வீட்ல போய் பெட் ரெஸ்ட்ல இருக்கனும்னு மிரட்டி அனுப்பிச்சாங்க. அதனாலதான் வளைகாப்பை சீக்கிரமா வச்சு எங்க வீட்டுக்கு கூட்டீட்டு வந்துட்டோம். எட்டு மாசம், அதாம்மா இந்த மாசம், முடியும்போது பிரஷர் ஜாஸ்த்தியா இருந்தா ஆஸ்பத்திரியில பெட்டுல சேற வேண்டியிருக்கும்னு சொன்னாங்க. என் மகன் கிட்ட கொழந்தை எடை ஒழுங்கா ஏறலைன்னா பிரசவமானதும் அதுக்கு கண்ணாடி பெட்டியில வச்சு வைத்தியம் பார்க்க வேண்டியிருக்கும், அதனால அந்த வசதியெல்லாம் இருக்கிற பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடறேன்னு தனியா கூப்பிட்டு சொல்லியிருக்காங்க.”
“சரி. உங்க டாக்டர் கலைவாணி கிட்ட பார்த்த சீட்டெல்லாம் எடுத்துட்டு வந்தீங்களா?”
“எல்லாம் ஒரு பையில போட்டு வச்சிருந்தேன். மாப்பிள்ளை அதை எடுத்துட்டு வந்திருக்கார்.”
“அப்படியா. சரி. கொஞ்ச நேரம் இங்கேயே உட்கார்ந்திருங்கம்மா. நான் போய் டாக்டர் ரமேஷை பார்த்து இதெல்லாம் சொல்லீட்டு உங்க மாப்பிளையையும் மேலெ வரச் சொல்கிறேன்.” என்று சொல்லி எழுந்து வெளியே சென்றாள் ரேவதி.
…
வெளிக்கதவை திறந்து ரேவதி வருவதை உட்கதவின் கண்ணாடி வழியாகக் கவனித்த ரமேஷ், அவளை வெளி அறையிலேயே இருக்கும்படி சைகை செய்தார்.
“செல்வி, நான் போய் attenders கிட்ட பேசி விட்டு வர்றேன், பார்த்துக்க,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.
வெளி அறையின் சுவற்றில் மாட்டியிருந்த தொலைபேசியில் ரேவதி அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்தாள். “Hello. Dr. Revathi here. நீங்க யாரு?…ஓ, ராதா சிஸ்டரா… Good morning… Sister, Emergency delivery ஆச்சே, மீனாட்ச்சி, அந்தப் பொண்ணுக்கு fits வந்ததாமே? இப்ப எப்படி இருக்காங்க? … ICU-க்கு போயாச்சா. யார் பார்க்குறாங்க?… OK, நான் அங்கேயே கேட்டுக்கறேன். அந்தப் பொண்ணோட husband அங்கே இருந்தா… ஓ. இங்கேதான் வந்திருக்காறா, சரி நான் பார்த்துக்கறேன். Thanks.” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தாள்.
திரும்பி ரமேஷை பார்த்துப் புன்னகைத்து, “Hello again, Dr. Ramesh. A busy morning has become busier, இல்லையா?!”
அவளைப் பார்த்து ரமேஷும் புன்னகைத்து, “Good morning Revathi. NICU setting-ல இதெல்லாம் சகஜம்தானே! History, pregnancy details ஏதாச்சும் கிடைச்சுதா?” என்று கேட்டார்.
“Yes. Delivery ஆன பொண்ணு பெயர் மீனாட்ச்சி, அவளோட அம்மா கிட்ட பேசினேன். She’s 24. Consanguineous marriage1. அத்தை, அதாவது அப்பாவோட அக்கா மகனுக்குக் கட்டிக் கொடுத்திருக்காங்க. பதினெட்டு வயசுல கல்யாணம். இது fourth pregnancy. Three previous abortions, all at 3 to 4 months gestation. Present pregnancy booked2, being seen by Dr. Kalaivani in their town. Complicated by PIH3 and IUGR4. Possible pre-eclampsia5. Case records இப்ப கையில் இல்லை. Husband கொண்டு வந்திருக்கிறதா சொன்னாங்க. Check பண்ணனும். She developed pains early this morning. Taken to Dr. Kalaivani’s hospital. She referred them to a higher centre. டாக்சியில் வரும்போதே membranes rupture6 ஆயிட்டதா அம்மா சந்தேகமா சொல்றாங்க. She’s not sure because she says there was very little liquor leakage7. Mother had one episode of what sounds like generalized seizures8 after they reached our casualty. Then she lost consciousness and delivered. இப்ப mother has been shifted to the ICU. ராதா சிஸ்டர் husband இங்கே வந்திருக்கிறதா சொன்னாங்க.”
“Wow! இவ்வளவு details கேட்டு, case present பன்ற மாதிரி சொல்லீட்டியே. Good job, ரேவதி.” சிரித்தார் ரமேஷ். “சரி என் கூட வா, husband வந்திருந்தா அவரையும் விசாரிப்போம்,” என்று சொல்லிக் கதவைத் திறந்தார்.
வெளியே இருபத்தைந்திலிருந்து முப்பது வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்து ரமேஷ், “மீனாட்சியோட வீட்டுக்காறர்…” என்று இழுத்தபடி கேட்டான்.
“சார், நான்தான் சார். என் பெயர் சுந்தர் சார்,” என்று சொல்லிக் கொண்டு அவர்களில் ஒருவன் முன்னால் வந்தான்.
“வணக்கம், நான் டாக்டர் ரமேஷ், Neonatologist, அதாவது பச்சிளம் குழந்தைகள் மருத்துவத் துறை நிபுனர்.” சுந்தரிடம் இதைச் சொல்லிக்கொண்டே அருகில் நின்றிருந்த இன்னொருவனை உற்றுப் பார்த்தார் ரமெஷ். அவனிடம், “உங்களை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கேனே?” என்று கேட்டான்.
அவன் சிரித்தபடி முன்னால் வந்து, “சார், நல்லா முகம் ஞாபகம் வச்சிருக்கீங்களே சார்!” என்றான். “ரெண்டு வருஷம் முன்னால நீங்க கோயம்பத்தூர்ல பிருந்தாவன் ஹாஸ்பிடல்ல இருந்தப்ப அடிக்கடி உங்க சீனியர் டாக்டர் செல்வக்குமாரை பார்க்க வந்திருக்கேன் சார். அப்ப மெடிக்கல் ரெப்பா இருந்தேன் சார். என் பெயர் சேகர். சுந்தரோட நன்பன் சார்.”
“அப்படியா. நல்லது! வாங்க, இங்கே உள்ளே உட்கார்ந்து பேசுவோம்,” என்று அவர்கள் இருவரையும் மீனாட்சியின் தாய் உட்கார்ந்திருந்த ஆலோசனை அறைக்கு அழைத்துச் சென்றார் ரமேஷ்.
“அந்த ரெண்டு chair இழுத்துப் போட்டு உட்காருங்க … நீங்களும் உட்காருங்க Dr. ரேவதி,” என்று சொல்லி சுழற்நாற்காலியை மேஜைக்குப் பின் தள்ளி அதில் உட்கார்ந்தார் ரமேஷ்.
“Dr. ரேவதி நீங்க சொன்னதெல்லாம் என்கிட்ட சொன்னாங்கம்மா. உங்க டாக்டரைப் பார்த்த சீட்டெல்லாம் …” என்று மீனாட்சியின் தாயிடம் கேட்டவரைக் குறுக்கிட்டு சுந்தர், “கொண்டுவந்திருக்கேன் சார். இதோ …” என்று தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து ஒரு தடித்த கோப்பை எடுத்துக் கொடுத்தான்.
அதை வாங்கி மேஜையின் மேல் வைத்து சில நிமிடங்கள் புரட்டினார் ரமேஷ். அவர் அருகில் நின்றுகொண்டு அவர் பார்த்துக்கொண்டிருந்ததை தானும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரேவதி. தேவையான தகவல்களைப் பார்த்ததும் கோப்பை மூடிவிட்டு சுந்தரையும், மீனாட்ச்சியின் தாயையும் பார்த்துப் பேசத் தொடங்கினார் ரமேஷ். “நீங்க சொன்னது, உங்க டாக்டரம்மா பார்த்திருக்கிற வைத்தியம் எல்லாத்தையும் பார்த்தா மீனாட்ச்சியோட கர்ப்பம், பிரசவத்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கணும். இப்ப அதனால குழந்தைக்கு என்ன தொந்தரவுகள் வரலாம்னு நான் முதலில் சொல்றேன். நான் முடிச்சதுக்கப்புறம் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் விளக்கம் சொல்றேன்.”
“முதல் விஷயம், நெருங்கிய சொந்தத்தில் கல்யாணம் செய்ததனாலேயே பிரச்சினைகள் தொடங்கியிருக்கும். அவங்களுக்கு இதற்கு முன் கலைந்த மூன்று கர்ப்பங்களுக்கும் அதுவே முக்கிய காரணமாக இருக்கலாம். உங்க பழைய சீட்டுப்படி Dr. கலைவாணி மீனாட்ச்சிக்கு APLS-ன்னு நாங்க சொல்ற தொந்தரவு இருக்குன்னு கண்டுபிடித்திருக்கிறார். அந்தப் பிரச்சினைக்கு வைத்தியம் செய்து இந்த முறை கர்ப்பம் தங்கியிருந்தது நல்ல விஷயம். ஆனா ஐந்தாவது மாசத்திலிருந்து இரத்தக் கொதிப்பு வந்ததனால பிரச்சினை ஜாஸ்தி ஆயிருக்கு. அம்மாவுக்கு இரத்தக் கொதிப்பு இருந்தால், அதைக் கட்டுப்படுத்தி வைத்தாலுமே குழந்தையை கண்டிப்பாக பாதிக்கும். சாதாரணமா ஆறாவது மாசத்திலிருந்து குழந்தையின் எடை வாரத்திற்கு 200 கிராம் அதிகமாகணும். அம்மாவுக்கு இரத்தக் கொதிப்பு இருந்தால் அந்த அளவுக்கு எடை அதிகமாகாது. குழந்தையை சுற்றி பனிக்குடத்தில் இருக்கும் நீர் குறைந்துவிடும். இது இரண்டுமே இந்தக் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கு. உங்க சீட்டில் குறித்திருக்கும் கடைசியாக வீட்டுக்கு தூரமான தேதிப்படி இது 32-வது வாரம், அதாவது 8 மாதம் முடியப்போகும் நேரம். 32 வாரத்திற்கு சாதாரணமாக குழந்தையின் எடை 1500-1600 கிராம் இருக்கணும். மீனட்சியோட குழந்தைக்கு இப்ப எடை பார்த்தோம். 820 கிராம் தான் இருக்கு. அதாவது 7 மாதங்களுக்கான வளர்ச்சி தான் இருக்கு.”
“இந்த மாதிரி குறை மாதத்தில் எடை மிகக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு இங்கே NICU-வில், அதாவது பச்சிளம் குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பல நாட்கள் கண்காணிக்க வேண்டி வரும். இந்தக் குழந்தைக்கு பல தொந்தரவுகள் வர வாய்ப்பிருக்கிறது. மிக முக்கியமாக, நுரையீரல் போதுமான அளவு வளர்ச்சி அடையாததால் மூச்சு விடத் தொந்தரவு வரலாம். அப்படி வந்தால் நுரையீரல் விரிவடைய விலை அதிகமான மருந்துகள் கொடுக்க வேண்டும், மோசமாக இருந்தால் முச்சுக் குழாயில் tube போட்டு ventilator, அதாவது செயற்கை சுவாச இயந்திரத்தில் பொறுத்த வேண்டிய சூழ்நிலையும் வரலாம். மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் போதுமான அளவு வளர்ச்சி அடையாததால் மூளைக்குள் இரத்தக் கசிவு ஏற்படலாம். குழந்தைக்கு பால் குடிக்கப் பிரச்சினை வரலாம்.
குழந்தை ஒரு பிரச்சினையும் இல்லாமல் சுயமாக மூச்சு விட்டு, பால் குடித்து, நன்றாக இருக்கும் வரை இங்கே NICU-வில் கண்டிப்பாக இருக்க வேண்டும். உள்ளே வைத்திருந்தால் ஒரு நாளுக்கு சுமார் எழுநூற்று ஐம்பது ரூபாய் செலவாகும். இது போக மருந்துகள், ட்ரிப்ஸ் போன்றவைகளை தேவைக்கு ஏற்றபடி நீங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும். தோராயமாக ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக் கொள்ளலாம். நான் ஏற்கனவே சொன்ன பிரச்சினைகள் ஏற்பட்டால் செலவு அதிகம் ஆகும். Ventilator மாட்டினால் ஒரு நாளுக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகும். இந்த அளவிற்கு செலவு செய்ய உங்களுக்குக் கஷ்டம் என்றால் சொல்லுங்கள் இன்று ஒரு நாள் பார்த்துவிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகிறேன்.” என்று சொல்லி, “இனி உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.” என்றார்.
தொடரும்…
வாசக நண்பர்களுக்கு: முதல் மூன்று பாகங்களுக்கு பதிவில் மறுமொழியாகவும் ட்விட்டரிலும் நண்பர்கள் சிலர் சொன்ன கருத்துக்களை ஏற்று சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். முதலாவதாக ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கிறேன். கதாபாத்திரங்களின் பேச்சில் ஆங்கிலம் அதிகமாக உள்ளதாக ஒரு கருத்து. இது என்னைப் பொறுத்த வரையில் தவிர்க்க முடியாத விஷயம். இன்றைய நிலையில் (என் மானசீக குருநாதர் பேயோன் சமகாலத்தில் என்பார்) ஒரு மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் எப்படி பேசிக்கொள்கிறார்களோ அப்படியே எழுதியிருக்கிறேன். அதனால் தான் முதல் இரண்டு பாகங்களில் நீளமான அடிக்குறிப்புகளில் விளக்கம் அளித்திருந்தேன். அடிக்குறிப்புகளின் நீளத்தை குறைத்துவிட்டேன். கதையில் உபயோகித்திருக்கும் மருத்துவத் துறை கலைச்சொற்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு கதையிலேயே விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறேன்.
அடிக்குறிப்புகள்:
இந்தக் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மருத்துவத்துறையில் நான் பார்த்த நிகழ்வுகளையும், சந்தித்த நபர்களையும் ஒட்டி நான் கற்பனை செய்தவை. உன்மையான நபர்களையோ சம்பவங்களையோ குறிப்பவை அல்ல.
நான் உபயோகித்திருக்கும் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட சொற்களை இந்த குறிப்புகளில் விவரிக்கிறேன். பல மருத்துவக் கலைச்சொற்களை தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் கலைச்சொற்கள் பட்டியலில் இருந்து எடுத்தேன்.
- Consanguineous marriage – நெருங்கிய இரத்த உறவினருடன் திருமணம்.
- Booked Pregnancy – கர்ப்பம் தரித்ததில் இருந்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரைப் பார்த்திருக்கிறார்கள் என்று குறிக்கும்.
- PIH – Pregnancy Induced Hypertension – கருவுற்றதால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம்.
- IUGR – Intra-Uterine Growth Retardation – கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி குன்றியுள்ளதை குறிக்கும்.
- Pre-eclampsia – பேற்றுக்கு முன் மருட்சி. இது இரத்த அழுத்தம் அதிகமாக (மேலே குறிப்பிட்டுள்ள PIH) இருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும்.
- Rupture of Membranes – பிரசவத்தின் பொழுது பனிக்குடம் உடைதல்.
- Liquor amnii – also known as Amniotic Fluid – பனிக்குட நீர் – கருப்பையில் குழந்தையைச் சுற்றி இருக்கும் நீர்.
- Generalized seizures – கால்-கை வலிப்பு.