பாகம் 1 இங்கே உள்ளது.
…
இளம்பிள்ளை வாதம் என்று போலியோ நோயின் தமிழ் பெயரைக் கேட்டாலே அது சிறுவர்களைத் தாக்கும் நோய் என்பது தெரியும். போலியோ பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தாக்கும். மலத்தின் வழியாகப் பரவும் தீநுண்மத் தொற்று நோய். பொதுச் சுகாதாரம் மோசமாக உள்ள இடங்களில், மனிதக்கழிவுகளினால் (மலத்தினால்) மாசடைந்த நீர் அல்லது உணவை உட்கொள்ளும்போது தொற்றுகிறது. உட்கொள்ளப்பட்ட தீநுண்மங்கள் குடல் சுவற்றை ஊடுருவி அருகில் உள்ள நிணநீர்க்கணுக்களில் (lymph nodes, பொதுவழக்கில் நெரிக்கட்டி என்று சொல்லுவோம்) குடி கொண்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் ஏற்படலாம். வயிற்றுப்போக்கில் (மலத்தில்) மீண்டும் தீநுண்மங்கள் வெளியேறும். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆடைகளிலும், அவர்கள் மலம் கழிக்கும் இடங்களிலும், அவர்களை குளிப்பாட்டும் இடங்களிலும் தீநுண்மம் அதிகம் பரவியிருக்கும். பொதுவெளியில் மலம் கழித்தால், அந்தப் பொதுவெளிகளிலுள்ள குடிநீர் வழங்கும் இடங்களிலும் பரவி மற்றவர்களைத் தாக்கும். போலியோ தீநுண்மம் வெளிப்புறத்தில் அறுபது நாள் வரை உயிருடன் இருக்கும்.
முதல் பாகத்தில் சொன்னதுபோல் போலியோ தீநுண்மத் தாக்குதல் ஏற்படும் 99 சதவீதக் குழந்தைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற எளிமையான விளைவுகள் மட்டுமே உண்டாகும். மீதமுள்ள ஒரு சதவீதக் குழந்தைகளில், போலியோ தீநுண்மங்கள் குடலுக்கு அருகில் உள்ள நிணநீர்கணுக்களிலிருந்து இரத்த ஓட்டத்தில் கலந்து இயக்க நரம்பணுக்களைத் தாக்கும் (இயக்க நரம்பணுக்கள் என்பவை தண்டுவடத்திலும், மூளைத்தண்டிலும் காணப்படும் சிறப்பு அணுக்கள். இவை உடலில் தசைகளை இயக்கச் செய்யும். Motor neurons present in the spinal cord and brainstem). மூளைத்தண்டில் உள்ள இயக்க நரம்பணுக்கள் மூச்சு இயக்கம், உணவு விழுங்குதல் போன்ற மிக முக்கிய இயக்கங்களை கட்டுப்படுத்துபவை. இந்த அணுக்களை போலியோ தாக்கினால் உயிருக்கே ஆபத்து. இந்த வகையான போலியோ தாக்குதல் மிக மிக அரிது. போலியோ நோய்வாய்ப்படும் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு தண்டுவடத்தில் உள்ள நரம்பணுக்களில்தான் தாக்கம் ஏற்படுகிறது. இந்த அணுக்கள் கைகள், கால்கள் மற்றும் வயிற்றில் உள்ள தசைகளை இயக்கும். போலியோ நோய்த் தாக்கத்தினால் இந்த நரம்பணுக்கள் அழிந்து, அவை இயக்கும் தசைகள் செயலிழந்து போகும். நோய்த் தாக்கத்தின் வீரியத்தைப் பொறுத்தும் பாதிக்கப்படும் நரம்புகளைப் பொறுத்தும் ஒரு கால், அல்லது இரு கால்கள் மட்டும், அல்லது வயிற்று தசைகளும், கைகளும் சேர்ந்து செயலிழந்து போகும்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் போலியோ நோய் எதிர்ப்பை 1938-ம் ஆண்டு அதிகாரபூர்வமாகத் துவக்கி வைத்தார். அன்றைய நாளில் உலகத்தில் மிகப் பிரபலமான போலியோ நோயாளியான ரூஸ்வெல்ட் துவக்கி வைத்த மார்ச் ஆஃப் டைம்ஸ் நிறுவனம் (March of Dimes Foundation) போலியோ தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு நிதி உதவி அளித்தது.
அந்த நிறுவனத்திடமிருந்து ஆராய்ச்சி நிதி பெற்ற ஜோனாஸ் சால்க் என்ற அமெரிக்க மருத்துவ அறிவியல் அறிஞர் 1955-ம் ஆண்டில் போலியோ தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். கவனிக்க. அவர் கண்டுபிடித்தது தடுப்பூசி. இந்த ஊசி கொல்லப்பட்ட போலியோ தீநுண்மங்களைக் கொண்டது.
நம் நாட்டில் கொடுக்கப் படும் போலியோ சொட்டு மருந்தை 1960-ம் ஆண்டில் ஆல்பர்ட் சாபின் என்ற அமெரிக்க மருத்துவ அறிவியல் அறிஞர் கண்டுபிடித்தார். இந்தச் சொட்டு மருந்து உயிருடன் உள்ள வீரியம் நீக்கப்பட்ட போலியோ தீநுண்மங்களைக் கொண்டது.
அமெரிக்காவில் சால்க் தடுப்பூசி மட்டும் தான் போடுகிறார்கள். குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட வேண்டிய கால அட்டவணை: குழந்தையின் வயது இரண்டு மாதம் ஆகும்பொழுது முதல் முறை, நான்கு மாதத்தில் இரண்டாம் முறை, ஆறு மாதத்திலிருந்து ஒன்றரை வயதிற்குள் மூன்றாம் முறை. நான்கிலிருந்து ஆறு வயதிற்குள் ஒரு உயரூட்ட ஊசி (booster dose).
நம் நாட்டில் சாபின் சொட்டு மருந்து கொடுக்கப்படும் கால அட்டவணை: குழந்தை பிறந்து ஒரிரு நாளில் முதல் முறை (இதற்கு Zero dose என்று பெயர்); ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதங்களில் மூன்று முறை (டிபிடி/DPT தடுப்பூசிகளுடன் சேர்த்து); ஒன்றரை வயதிலும் ஐந்து வயதிலும் ஒவ்வொரு முறை. இது தவிர குழந்தைக்கு ஐந்து வயது ஆகும் வரை அறிவிக்கப் படும் ஒவ்வொரு பல்ஸ் போலியோ நாளிலும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
பல்ஸ் போலியோ போன்ற நிகழ்வுகளில் ஒரே நாளில் லட்சக் கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்க சொட்டு மருந்துதான் வசதியாக உள்ளது. சொட்டு மருந்தில் இன்னொரு ஆதாயமும் இருக்கிறது. சொட்டு மருந்தில் உள்ள வீரியம் நீக்கப்பட்ட போலியோ தீநுண்மங்கள், நோய் பரவும் அதே வழியில், அதாவது மனிதக்கழிவுகளால் மாசடைந்த நீர் மற்றும் உணவின் மூலம் சொட்டு மருந்து வழங்கப் படாத குழந்தைகளுக்கும் பரவி, அவர்களின் உடலிலும் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும்.
துவக்கத்தில் தடுப்பூசிக்குக் கிடைத்த ஆதரவு சொட்டு மருந்துக்குக் கிடைக்கவில்லை. மேலே கூறிய இரண்டு ஆதாயங்களை முன்னிட்டு சொட்டு மருந்து உபயோகம் அதிகரித்தது. 1962-ம் ஆண்டில் ஆரம்பித்து அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் பரவலாகச் சொட்டு மருந்து கொடுத்ததால் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களிலிருந்து போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. அமெரிக்க கண்டங்களில் கடைசியாக போலியோ நோய் 1991-ம் ஆண்டில் பெரு நாட்டில் ஒரு சிறுவனைத் தாக்கியது.
பரவலாகச் சொட்டு மருந்து கொடுத்ததால் போலியோ நோய்த் தாக்கம் குறைந்துள்ளது என்று சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்தது. இந்த வெற்றிகள் கொடுத்த உந்துதலில், உலகம் முழுவதும் போலியோ நோயை ஒழிக்கும் முயற்சி உலக சுகாதார அமைப்பால் 1988-ம் ஆண்டு துவக்கப் பட்டது. அதே வருடம் சர்வதேச ரோட்டரி அமைப்பு இந்த முயற்சிக்காக இருபத்தைந்து கோடி அமெரிக்க டாலர் கொடுப்பதாக உறுதி அளித்தது. (இதுவரை ரோட்டரி அமைப்பு போலியோ ஒழிப்புக்காக, ரோட்டரி போலியோ பிளஸ் நிதி என்ற பெயரில் எழுபது கோடி அமெரிக்க டாலர் கொடுத்திருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அவருடைய பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபௌண்டேஷன் மூலமாக முப்பத்தைந்து கோடி அமெரிக்க டாலர் வழங்கியிருக்கிறார்). UNICEF அமைப்பு உலகளவில் தேவைப்படும் சொட்டு மருந்தை தயாரித்து, பட்டுவாடா செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டது. இது தவிர அமெரிக்க அரசும் தன் பங்கிற்கு நிதி உதவி அளித்தும், போலியோ ஒழிப்பை அதனுடைய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (Centers for Disease Control and Prevention) முக்கியப் பணிகளில் ஒன்றாக அறிவித்தது.
இந்தக் கூட்டு முயற்சிக்கு அமோக வெற்றி கிடைத்திருக்கிறது. 1988-ம் ஆண்டில் மூன்றரை லட்சம் பேரைத் தாக்கிய போலியோ நோய், பதினைந்து ஆண்டுகள் கழித்து 2003-ம் ஆண்டில் இரண்டாயிரத்திற்கும் குறைவானவர்களைத்தான் தாக்கியது. 2003-ம் ஆண்டில் உலகத்தில் ஆறு நாடுகளில் – நைஜீரியா, நைஜர், எகிப்து, ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா – மட்டும்தான் போலியோ உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டு முயற்சியில் ஒரு முக்கிய அங்கம், போலியோ நோய்த் தாக்கம் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் தேசிய நோய்த் தடுப்பேற்ற நாள்கள் (பல்ஸ் போலியோ நாள்கள்). அந்த நாடுகளில் குழந்தைகளுக்கு ஐந்து வயது வறை கால அட்டவணைப் படி கொடுக்கப் படும் தடுப்பு மருந்து போக கூடுதலாக வருடம் இரு முறையாவது இந்த பல்ஸ் போலியோ நாள்களிலும் கொடுக்கப்படும்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று உண்டு. உலக சுகாதார அமைப்புக்கு இதையேல்லாம் செய்ய தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை. இந்த அமைப்பின் கிளைகள் ஒவ்வொரு நாட்டின் அரசு விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டுதான் செயல்புரியவேண்டும். சொட்டு மருந்து தயாரிப்பு, பட்டுவாடா, மருந்து கொடுக்க ஆள் பலம் சேர்ப்பது, இவை எதையுமே இந்த அமைப்பு செய்வதில்லை. உலக சுகாதார அமைப்பின் நம் நாட்டுக் கிளையில் சுமார் இருநூற்றைம்பது மருத்துவர்கள் போலியோ நோய் கண்காணிப்பிற்காக வேலை செய்கிறார்கள். இந்த அமைப்புக்கு ஆள் பலம் குறைவாக இருந்தாலும், தகவல் வளமும், நிபுணத்துவமும் கணிசமாக உள்ளன.
(மேலும் ஒரு பாகம் வரலாம்…)





பாகம் 1 … இங்கெ —–> பிழை
இலவசக்கொத்தனார் கவனிப்பாராக
)
Comment by antonioanbu — செப்டம்பர் 28, 2011 @ 9:55 பிற்பகல் |
திருத்தியாச்சு சாரே! அது கொத்தனார் எபி திருத்திக் கொடுத்தப்றம் நான் செஞ்சது.
Comment by Vijay — செப்டம்பர் 28, 2011 @ 11:13 பிற்பகல் |
முதற்பதிவின் இறுதியில் சொல்லப்பட்ட வீலரின் பதில் எங்ஙனம் நிறைவேற்றப்பட்டது?
பொதுச்சுகாதாரத்தில் அலட்சியம் காட்டுவோர் முதல் பத்தியை சில முறை வாசித்தல் நலம்.
Comment by இராதாகிருஷ்ணன் — செப்டம்பர் 29, 2011 @ 2:21 மு.பகல் |
துடைத்தெடுத்தலை எப்படி நிறைவேற்றினார்கள் என்பதை இன்னொரு பாகமாத்தான் எழுத வேண்டும்.
Comment by Vijay — செப்டம்பர் 29, 2011 @ 7:44 மு.பகல் |