எழுத்துப் பிழைகளை சரி பார்த்துக் கொடுத்த ட்விட்டர் நண்பர்கள் இலவசக் கொத்தனார், வெற்றிராஜ் இருவருக்கும் மனமார்ந்த நன்றி.
…
ஃபுகுஷிமாவில் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 11) பிற்பகல் தொடங்கி இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் பற்றி முக்கியமான விளக்கத்தை (தமிழ்ப் பதிவுலகில் பரவலாக டிஸ்கி என்று சொல்லப்படும் disclaimer) முதலில் பார்க்கலாம்.
எட்டு நாள்களாக நடந்து கொண்டிருக்கும் இந்த நெருக்கடியைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் தகவல்களைத் தெரிந்து கொள்ள சரியான செய்தி மூலங்கள் இல்லை என்பதே உண்மை. ஜப்பான் அரசு கொடுக்கும் செய்தி அறிக்கைகள் மற்றும் சில சர்வதேச அணுசக்தி அமைப்புகள் கொடுக்கும் செய்திகள், விளக்கங்களையும் வைத்துத்தான் எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. யார் சரியான தகவல்கள் கொடுக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க சாமானியரால் முடியாது. இந்நிலையில் இங்கே நான் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் சரியானவைதான் என்று என்னால் உறுதியளிக்க முடியாது.
இந்தப் பதிவுத்தொடரின் முதல் பாகத்தில் “ஃபுகுஷிமா இரண்டாம் நிலையத்தில் நான்கு (4) அணு உலைகள் உள்ளன. இந்த நிலையத்தில் இப்பொழுது குழப்பம் ஒன்றும் இல்லை.” என்று எழுதியிருந்தேன். “இப்பொழுது குழப்பம் இல்லை” என்பது உண்மை. ஆனால் சுனாமி தாக்கியதில் அங்கேயும் பிரச்சனை ஆனது. இரண்டு நிலையங்களையும் சுனாமியிலிருந்து பாதுகாக்க கடற்கரையிலிருந்து சற்று தள்ளி கடலில் சுவர் எழுப்பியிருந்தார்கள். இருபது அடிக்குக் குறைவான பேரலைகள் இந்தச் சுவர்களைத் தாண்டி நிலையத்தைத் தாக்க முடியாது. ஆனால் அன்று தாக்கிய பேரலைகள் முப்பது அடிக்கும் மேலான உயரத்தில் இருந்ததால் சுவர்களைத் தாண்டி இரண்டு நிலையங்களையும் தாக்கின. ஃபுகுஷிமா இரண்டாம் நிலையத்தில் குளிர்ந்த நீர் கொண்டுவரும் பம்புகள் (முதல் பாகத்தில் போட்டிருந்த இந்தப் படத்தில் 16 எண்ணிட்டது) பேரலை தாக்குதலால் பாதிக்கப்பட்டு செயலிழந்தன. இதனால் அங்கே உள்ள நான்கு உலைகளிலும் வெப்பத்தைத் தணிக்கமுடியவில்லை. ஆனால் 48 மணி நேரத்தில் மாற்றுப் பம்புகளை வைத்து பிரச்சனை பெரிதாகாமல் தடுத்துவிட்டார்கள்.
இந்த எட்டு நாள்களில் நடந்த சம்பவங்களை காலக்கோடுகளாக விக்கிப்பீடியாவில் போட்டிருக்கிறார்கள். அங்கே இருக்கும் அத்தனை விபரங்களையும் முழுமையாக என்னால் விளக்க இயலாது. அறிந்துகொள்ள விரும்புவோர் அங்கே பார்த்துக்கொள்ளுங்கள்.
CNN வலைத்தளத்தில் விக்கிப்பீடியாவை விட எளிமையாக இருக்கிறது. முக்கியமான சிலவற்றை மட்டும் நான் விவரிக்கிறேன்.
[முதல் பாகத்திலிருந்து தொடர்ச்சி] மார்ச் 11, வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 2:45 மணிக்கு நிலநடுக்கம் நடந்த சில நொடிகளிலேயே மூன்று உலைகளிலும் (units 1, 2, 3) செயல்பாடு நிறுத்தப்பட்டது. இது அவர்களின் தானியங்கி அவசர கால பாதுகாப்பு நடைமுறைப்படி சரியாக நடந்தது. அன்று ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் அந்தப் பகுதியின் மின்வாரிய க்ரிட் செயலிழந்து போயிருந்தது. மின் தட்டுப்பாடு ஏற்படாமல் அவசர கால டீசல் மின் இயற்றிகள் செயல்பட ஆரம்பித்தன. மூலப்பொருள் மையத்தில் தொடர்வினை நிறுத்தப்பட்டபின் வெளியாகும் வெப்பத்தைத் தணிக்க நீர் சுற்றோட்டப் பம்புகளை இந்த மின் இயற்றிகள் செயல்படுத்திக்கொண்டிருந்தன.
அப்பொழுதே இரண்டு உலைகளில் (1 & 2) வெப்பத்தைக் குறைப்பதில் பிரச்சனை இருப்பதாக இந்த நிலையத்தை இயக்கும் டோக்கியோ மின் வாரியம் (Tokyo Electric Power Company, TEPCO) மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள். நிலநடுக்கம் ஏற்படுத்திய ஆழிப்பேரலை சுமார் அரை மணி நேரம் கழித்து ஃபுகுஷிமா 1 நிலையத்தைத் தாக்கியது. இந்த பயங்கரப் பேரலைத் தாக்குதலில் 5 உலைகளுக்கான அவசரகால டீசல் மின் இயற்றிகள் சேதமடைந்தன. ஆறாம் உலையின் மின் இயற்றி மட்டும் சேதமின்றித் தப்பித்தது என்றும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தது என்றும் ஓரிரு நாள் கழித்து வந்த செய்திகளில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு நெருக்கடி நிலை மின்கலங்களைக் கொண்டும் (emergency battery backup), “mobile power units” – நகர்த்தக்கூடிய மின் இயற்றிகளைத்தான் (portable generators) வைத்து உலைகள் 2, 3-ல் ஓரளவு நிலைப்படுத்தியிருக்கிறார்கள் (stabilized). ஜப்பான் ராணுவம் நிலையத்திற்கு மின்கலங்களைக் (batteries) கொண்டு சென்றதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் உலை 1-ல் நிலைமை மோசமாகிக்கொண்டிருந்தது.
ஜப்பான் அரசின் அணுசக்தி மற்றும் தொழில்துறை பாதுகாப்பு நிறுவனத்தின் நெருக்கடி நிலை தலைமை அலுவலகம் (Emergency Headquarters of the Nuclear & Industrial Safety Agency – NISA) அந்நாட்டில் உள்ள ஐம்பத்தைந்து அணு உலைகளின் நிலவரத்தைக் கண்காணிக்க ஆரம்பித்தது.
அன்று மாலை ஜப்பான் அரசு அணு சக்தி அவசரநிலை அறிவித்து ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு மூன்று கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றவும் மூன்றிலிருந்து பத்து கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும்படியும் ஆணை பிறப்பித்தது. 1-ம் உலையில் வெப்பத்தைத் தணிக்க முடியாததால் அழுத்தம் சாதாரணமாக இருப்பதைவிட இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்திருப்பதாகவும், நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என்றும் TEPCO நிறுவனம் அறிவித்தது. கதிரியக்கக் கசிவு (radioactive leak) இருப்பதாக அறிவிப்பு எதுவும் கொடுத்ததாகத் தெரியவில்லை.
சில ஊடகங்களில் நிலையத்திற்கு அருகில் வாழும் இருபத்தி இரண்டு பேருக்குக் கதிரியக்கக் கசிவுத்தாக்கம் (radiation exposure) ஏற்பட்டிருப்பதாகவும், உலை ஊழியர்கள் மூன்று பேர் கதிரியக்கத் தாக்கத்தால் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் (radiation sickness) செய்திகள் வந்தன.
மார்ச் 12, சனிக்கிழமை அதிகாலையிலிருந்து உலை 1-ல் கதிர் வீச்சு அளவு அதிகரித்து வருவதாகவும் கதிரியக்க கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் செய்திகள் வந்தன. கட்டுப்படுத்த முடியாத வெப்பத்தினால் மூலப்பொருள் மையத்தைச் சுற்றி உள்ள நீர் கொதித்து நீராவியாகி உலை அறையில் அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது. அழுத்தத்தைக் குறைக்க சனிக்கிழமை முற்பகல் இரண்டு முறை நீராவியை வெளியிட்டார்கள் (venting). இதனால் சிறிதளவு கதிரியக்கக் கசிவு ஏற்பட்டது.
சனிக்கிழமை பிற்பகல் ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு பத்து கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்ற ஆரம்பித்தது ஜப்பான் அரசு. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு NISA வெளியிட்ட அறிக்கையில் சிறிதளவு சீஸியம் (radioactive Cesium) கசிவு ஏற்பட்டுள்ளதாக சொன்னார்கள். எதனால் என்று விபரம் சொன்னதாகத் தெரியவில்லை. சீஸியம் கசிவு ஏற்பட்டுள்ளது என்றால் உலையில் மூலப்பொருள் நீர்காப்பற்று திறந்தவெளியில் இருந்திருக்க வேண்டும் (uncovered fuel core) அல்லது அணுக்கரு உருக ஆரம்பித்திருக்கவேண்டும் (core meltdown) என்பதே அனுமானம்.
சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் திடீரென்று 1-ம் உலையின் வெளிப்புறக் கட்டிடத்தின் கூரை வெடித்துச் சிதறியது. உலை ஊழியர்கள் நான்கு பேர் இந்த வெடி விபத்தில் காயமானார்கள். அதிகாரிகள் செய்தியாளர்களிடம் இதைப் பற்றி பேசுகையில் கதிரியக்க வாயுக்கள் எதுவும் கசியவில்லை என்றும் நீராவி அழுத்தம் அதிகமானதால்தான் இந்த வெடி விபத்து ஏற்பட்டது என்றும், கட்டிடத்தின் உள்ளே உலையின் அழுத்த அறைக்கு சேதாரம் ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னார்களாம். பின்னர் வந்த செய்திகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களும் அந்த வெடி விபத்து நீராவியால் ஆனது அல்ல என்றும் அது ஹைட்ரஜன் வெடி விபத்து என்றும் கூறின.
[படம் இங்கிருந்து எடுத்தது]
இவ்விடத்தில் ஹைட்ரஜன் வெடி விபத்து என்றால் என்ன என்று ஒரு சிறு விளக்கம் தேவை. முதல் பாகத்தில் உலையின் பாகங்களை விளக்கும் பகுதியில் அணுசக்தி மூலப்பொருட்கள் சிறு குண்டு வடிவத்தில் (fuel pellets) ஜிர்க்கோனியத்தால் (Zirconium) ஆன சன்னமான நீளக் குழாய்களில் (fuel rod; பென்சில் தடிமன், நீளம் சுமார் 12 அடி) நிரப்பி இருப்பார்கள் என்று பார்த்தோம். உலை செயல்பாட்டை நிறுத்தியபின் வெப்பத்தைத் தணிக்க வேண்டும் என்றும் புரிந்துகொண்டோம். வெப்பத்தைத் தணிக்க இயலவில்லை என்றால் என்ன ஆகும் என்று இப்பொழுது பார்ப்போம். மூலக்கருவில் வெப்பம் சுமார் 1200 டிகிரி செல்சியஸ் அளவைத் தாண்டினால் ஜிர்க்கோனியம் உருகி சுற்றி இருக்கும் நீராவியுடன் கலக்கும். ஜிர்க்கோனியம் நீராவியில் (steam – H2O) இருக்கும் ஹைட்ரஜனை வெளிப்படுத்திவிட்டு ஆக்சிஜனுடன் சேர்ந்து ஜிர்க்கோனியம் டையாக்சைடு ஆக மாறும். உலை அழுத்த அறையில் அழுத்தத்தை குறைக்க நீராவியை வெளியே விட்டார்கள் என்று மேலே பார்த்தோம். அப்படி வெளிப்படும் நீராவியுடன், ஹைட்ரஜன் வாயுவும் இருக்கும். அழுத்த அறைக்கு வெளியே இருக்கும் வெளிப்புறக் கட்டிடத்திலும் நீராவி மற்றும் ஹைட்ரஜன் அழுத்தம் அதிகமானால், காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் ஹைட்ரஜன் கலந்து பெரிதாக வெடிக்கும்.
இங்கே நாம் முக்கியமாக சில விஷயங்களை கவனிக்க வேண்டும். வெடி விபத்திற்கு காரணம் ஹைட்ரஜன்தான் என்றால், அதிகாரத்தரப்பில் சொன்னது முற்றிலும் பொய் என்று நிரூபணமாகும். ஹைட்ரஜன் வெடி விபத்து ஏற்பட்டது என்றாலே மூலக்கரு (fuel core) பாதுகாப்பாக இல்லை என்று அர்த்தம். அதாவது குழாயிலிருந்து வெளியே வந்து நீராவியுடன் கலந்திருக்க வாய்ப்புகள் அதிகம். மூலக்கரு அல்லது கிளர்மின் விளைவுப் பொருட்கள் (radioactive decay products from fuel core) கலந்த நீராவிதான் வெளியே வந்திருக்கவேண்டும். ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டது உலை ஊழியர்கள் நீராவி அழுத்தத்தைக் குறைக்க கசிய விட்டதால்தானா அல்லது உலை அழுத்த அறை சுவர்களில் விரிசல் ஏதாவது உள்ளதா என்ற சந்தேகமும் எழ வேண்டும்.
இந்த வெடி விபத்து நடந்த பின் ஜப்பான் அரசு ஃபுகுஷிமா 1 நிலையத்திற்கு இருபது கி.மீ. சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்ற ஆணை பிறப்பித்தது. இதனால் சுமார் இரண்டு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதுவரை ஜப்பான் அரசு கதிரியக்கக் கசிவு ஏற்பட்டதாக அறிவிப்பு எதுவும் வெளியடவில்லை.
சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அதிகாரிகள் உலை 1-ல் வெப்பத்தை தணிக்க நேரடியாக கடல் நீரை உள்ளே செலுத்தலாம் என்று முடிவெடுத்தனர். இந்த முடிவே நிலைமையின் தீவிரத்தை விவரமறிந்த பார்வையாளர்களுக்கு தெளிவாக விளக்கியது. கடலில் இருந்து எடுக்கப்படும் உப்புநீரை உலைக்குள் செலுத்தினால் அதுவே உலைக்கு சாவு மணி என்று விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். அதற்குப்பின் அந்த உலையை உபயோகிக்க முடியாது.
தொடரும்…


இப்பதான் ஓரளவு புரிந்தது.நன்றி,
Comment by K.V.Rudra — மார்ச் 21, 2011 @ 10:52 மு.பகல் |
[...] இரண்டாம் பாகம் இங்கே உள்ளது. [...]
வரு பிங்கு by ஜப்பான் அணு மின் நிலைய விபத்து – 3 « …நிழல்கள்… — மார்ச் 22, 2011 @ 9:36 மு.பகல் |